Monday, 24 December 2018

ஞாபகம்

தோழி !
என்னை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?


ஒவ்வொரு  நாள்
இரவிலும்
சில  நிமிடங்களாவது
உன்னை
நினைப்பதற்கு
மறந்ததில்லை  !


அப்போதெல்லாம்
மனம்
உலைகொதிப்பது  போல
கொதிக்கிறது !
காட்சிகள்
ஒன்றன்பின்
ஒன்றாக
மாறி மாறி
அணி வகுத்து வருகின்றன!


கடும்
தூசிப்படலங்களுக்கிடையில்
முகம் மூடிக்கிடக்கின்ற
பழைய புகைப்படத்தை போல
எனதின்
பழைய பதிவுகளில்
பெரும்பாலானவை
இன்னும்
தூசித்தட்டப்படாமலேயே
கிடக்கின்றன!


எனது
அனுபவங்களின்
நிறங்களின்
தொகுப்புகளில்
எதை
முதன்மை படுத்துவது
என்ற தடுமாற்றத்திலேயே
காலங்கள்
பல கடந்துவிட்டன!


நிறங்கள்
பல
தனது பொலிவை இழந்துவிட்டன!
ஆனாலும்
அதில்
ஒரு சில மட்டும்
முகம் காட்டி
இன்னும்
ஒளிவீசிக்கொண்டிருக்கின்றன!


உன்னை
சுமந்து
நான் நடைபயின்ற
புகை வண்டி பாதை
அகன்ற பாதையானதால்
பாதைசாரிகள்
யாரும்
நடந்து செல்வதில்லை
என
சொல்கிறார்கள் !


நாம்
நிழலுக்கு
ஒதுங்கிய
பெரும்பாலான
மரங்களை காணவில்லை !


பெரும்பாலான
மரங்கள்
சாலையை
அகலப்படுத்தவேண்டி
வெட்டி அகற்றப்பட்டுள்ளன !


தேங்காயை போல
ருசியாய் இருப்பதால்
அந்த மாமரத்தை
தேங்காய் மரம் என்போமே!
அந்த மரத்தின்
அடிச்சுவடே
தெரியவில்லை!


நாம்
நடந்து போகும்பாதையில்
வழக்கமாக
வண்ணார்கள்
துணி துவைத்துகொண்டிருப்பார்களே
அந்த
வண்ணான் குட்டையையும்
எங்கோ
தொலைந்து போயிருக்கின்றன !


நீயும்
உன் தோழிகளும்
ஒற்றையடி
புகைவண்டி பாதை  வழியே
ஓரக்கண்ணால்
எங்களை
பார்த்தும் பார்க்காதவாறும்
போவீர்கள்!

நாங்கள்
அந்த பார்வைக்கு பொருள்  தேடி தேடி
அடுத்தவாரம்  வரை
அனைவரும்
குழம்பி நிற்போம் !


அதை பற்றியெல்லாம்
ஏதும் தெரியாதது போல்
அடுத்தடுத்து
சிரித்துவைப்பீர்கள்!

அடுத்தவர்களின்
கண்களை
அழவைத்து
பார்ப்பதில்தான்
உங்களின்
கண்களுக்கு
எவ்வளவு ஆசை ..!


அளவோடு
சிரித்து  சிரித்து
எங்களை
ஆண்டுகணக்கில்
குழப்பிகொண்டிருந்த குழப்பம்
இன்றும்
தொடர்கிறது !

அந்த
சிரிப்பின்  மிச்சம்
என்
குருதி அணுக்களில்
இன்னும்
என்னை
இயக்குகின்றன !


அன்று
தினந்தோறும்
கால் நடையாகத்தான்
நடந்து போவோம் !


செருப்பு
அணியாத
நாங்கள்
கால் வலி
தாங்கமாட்டாமல்
இருவர்
இருவராக
தண்டவாளத்தில்
நடந்து சென்றுகொண்டிருப்போம்!


தமிழரசி
தலைமையில்
நீங்கள்
ஒருவர் பின்
ஒருவராக
இடைவெளிவிட்டு
சென்று கொண்டிருப்பீர்கள்  !


நாங்கள்
உங்களுக்கு
ஆசை ஆசையாக
நாவல் பழங்கள்
பறித்துகொடுப்போம் !
இப்போது
அந்த
நாவல் பழ மரங்களை
காணவில்லை !


நீங்கள்
வரும்போதும்
போகும்போதும்
நாங்கள்
உட்கார்ந்து டாவடித்த
புகைவண்டி சாலையின்
மதகுகள் அகற்றப்பட்டு
அங்கு
புதிய
சுரங்கப்பாதை
அமைக்கப்பட்டிருக்கின்றன!


இடங்கள்
முற்றிலும்
இடம் பெயர்ந்துள்ளன
எனினும்...


எத்தனை முறை
நீங்கள்
எங்களை திட்டினாலும்
உங்களிடம் மட்டுமே
எங்களுக்கு
மீண்டும்
மீண்டும்
அவமானப்பட
ஆசையாயிருந்தது!


என்னதான்
நீங்கள்
தூர விலகி விலகி  சென்றாலும்
உங்களிடம்
மட்டுமே
மீண்டும் மீண்டும்
தோற்றுப்போவதில்
எங்களுக்கு
விருப்பமாயிருந்தது!


உங்கள்
உதாசீனங்கள்
அனைத்தையும் தொகுத்து
மயில் இறகை
புத்தகத்தில்
வைத்து
கோழி
தன் குஞ்சை
அடைக்காப்பதை போல
அடைக்காத்து வந்தோம் !


காதல்
இல்லையென்று
எத்தனை முறை
அடித்து கூறினாலும்
உங்களை அறியாமலேயே
எங்களுக்குள்
உங்களை
விதைத்துகொண்டிருந்தீர்கள்!


முன்பு
கொடுந்தீயாக...
பின்னர்
மென்மையான தீபமாய்
உள்ளுக்குள்
உருமாற்றம் பெற்றீர்கள்!


வானத்தை
வில்லாய் வளைக்க தெரிந்தது!
இறக்கை  இல்லாமலேயே
எங்கும்
பறக்க முடிந்தது!


தூரங்கள்
சலிப்பை ஏற்படுத்தவில்லை!
விரல்களால்
மிக எளிதாக
அதன் பரிமாணத்தை
அளவீடு செய்ய முடிந்தது!


புகைவண்டி
போனபின்பும்
அது கடைசி வரை  சென்று
பார்வையிலிருந்து
மறையும் வரை
அதன்
கடைசி பெட்டியை
கனத்த
மனதோடு
தினந்தோரும்
காத்திருந்து
பார்த்து பார்த்து
எதையோ
நம்மிலிருந்து
யாரோ
எதையோ
எடுத்துகொண்டு போவது போல
ஏக்கத்துடன் திரும்பிய நாட்கள்
இன்னும்
எனக்குள்
உயிருடன் இருக்கின்றன!


ஆனால்
உன்னை
ஆண்டாண்டு காலம்
நினைந்து ... நினைந்து
நான்
தொடர்ந்து
சாகவேண்டும்
என்பதற்காகவே
என்
பார்வையின் விண்ணப்பத்தை
கடைசிவரை
பரிசீலிக்காமலேயே
விட்டுவிட்டாய் !



என்னை
மெள்ள மெள்ள
மறந்து போயிருப்பாய்!
உனது நாட்களின்
பதிவுகளில்
நான்
இல்லாமல் போயிருக்கலாம்!


ஆனாலும்
நீ
எனக்கு கொடுத்த
நெல்லிக்காய்
தொடர்ந்து
இன்னும்
எனக்குள்
இனித்து வருகிறது!
ஆனால்
எனது வாழ்க்கை
தொடர்ந்து
நெல்லிக்காயாக
கசப்பினை
கக்கி வருகிறது !


ஆடி
அமாவாசைக்கு
வைத்த
ஆதண்டங்காய்  குழம்பின்
சுவை
இன்னும்
என் நாவில்
மிச்சமிருக்கிறது !


உன்னை
அடிக்கடி
நினைத்துகொள்ள
எனது
சேமிப்பில்
உனது
பரிசுப்பொருட்கள்
ஏதும் இல்லாமல் போயிருக்கலாம்
ஆனாலும்
உனது
புன்னகையை
இன்னும்
செலவு செய்யாமல்
அப்படியே
சேமித்து வைத்திருக்கிறேன்!



அந்த
புன்னகை
பூக்கள்மீது
சின்ன சின்ன கவிதைகளால்
பூசிக்கிறேன்!


வாழக்கை
வெகுவாக
சாயம் வெளுத்து
சோம்பி
நிற்கின்றன!



கடந்த
சம்பவங்களின்
எச்சங்கள்
எங்காவது
மிச்சமிருக்கிறாதா
என
என் கண்கள்
தேடி அலைகின்றன!


நீ
ஓடி விளையாடிய
பல்வேறு
இடங்களில்
புதிய வீடுகள் முளைத்துவிட்டன!


பனைமரத்தோப்புகளில்
குடுக்கை வௌவ்வால்கள்
கொண்டுவந்து போடும்
வாதாங்கொட்டைகளை
பொறுக்கிய
இடங்களிலெல்லாம்
தற்போது
பனைமரங்கள் இல்லை !


விளாம்பழம்
பரித்து சாப்பிட்ட
விளாம் மரமும் இல்லை!
விளாம் மரம்
இருந்த இடமும்
வெறிச்சோடி போய்விட்டன!


புகை வண்டி
பாலத்தின்  மீது
கைகளில்
புத்தகங்களோடு நான்...
மாடுகளின்
கழுத்துமணி
டாண் டாண்--
என
ஒலியெழுப்பும்...
ஆடுகள்
ஒன்றோடு ஒன்று
முட்டி மோதிக்கொண்டு
பாலத்தின் கீழே
மேற்கு நோக்கி போகும்...
கொல்லை காட்டுக்கு
கூலிவேலைக்கு
போகும்
ஜனங்க
ஒருவருக்கொருவர்
வேகமாக பேசிக்கொண்டு செல்வார்கள்!


ஒரு
மகா கவியாய்
தன்னை கற்பனையில்
உருவகித்துகொண்டு
உன்னை
நினைத்து
கவிதையென
எதையாவது
எழுதிக்கொண்டிருப்பேன்!
அது கடைசியில்
அனைத்தும்
உனது பெயர்களாகத்தான்
இருக்கும் !



நேற்று
பெய்த மழையின்
மென்மையான ஈரக்காற்றின்
அமைதியூனூடே
வேலமரத்து வண்டுகள்
கத்தும் ஓசை
காதுகளின் வழியாக
ஆண்டுகணக்காக
கேட்டு கேட்டு
ஏதோ
இனம் புரியாத ஒன்றை
என்
மவுனத்தில்
லயிக்க வைக்கும்!


மிகப்பலமாக
சம்பணமிட்டு
உட்கார்ந்து கொண்டு
அடம்பிடித்து
அழுதுகொண்டிருந்த
உன் நினைவுகளுக்கு
காற்றோடும்
மரங்களோடும்
பூக்களோடும்
சினேகிக்க
சொல்லிக்கொடுத்தேன்!



இந்த மண்ணோடும்
இந்த ஊரோடும்
நான்
சுவாசித்த
உயிர் காற்று,


என்னை
இயக்கும்
ஸ்தூலமான
உறவுகளின் பின்னணி!


தொடர்ந்து
என்னை
நினைக்கத்தூண்டும்
என் கடந்த கால
சூழலின்
அழகான
மிச்சங்கள்!


எத்தனை
ஆண்டுகள்  போனாலும்
எந்த
வற்புறுத்தலுக்கும்
உள்ளாகாமல்
உன்னை
எப்போதும்
இயல்பாக
நினைத்து வைக்கிறேன்!


நீ
எந்த
யுகத்தில்
இருக்கிறாய்
என்பது கூட
இன்னும்
தெரிந்து கொள்ள
விரும்பாமலேயே

Image result for heartin with tears






தவிப்பு

காதல் என்பது
வெறும்
கனவுகளை
தின்று
கற்பனையில்
தன்னை தொலைத்துவிட்டு
தனக்குள்
தவிப்பதல்ல ...


காதல்
என்பது
இருவரது கைகுட்டைகளிலும்
தங்கள்  பெயர்களை
மாற்றி  மாற்றி
எழுதிகொள்வதல்ல...

 
காதல்
என்பது
இரு சுவர்களுக்கப்பால்
இருவரும்
குலுங்கி குலுங்கி அழுது
கண்ணீரால்
காற்றினில்
மாறி மாறி
கவிதை  எழுதுவதல்ல...

 
மாறாக
காதல் என்பது
நிஜ வாழ்க்கையின்
எதார்த்த உலகில்
தங்களை தாங்களே
புரிந்து கொள்வதாகும் !

 
காதலின்
சிறகுகளை
சுற்றிலும்
திட்டமிட்டு 
பின்னப்பட்டிருக்கும்
சின்ன சின்ன
கனவு வலைகளை
எரிப்பதாகும் !

 
சடங்குகளாலும்
சம்பிராதயங்களாலும்
காதலை
பீடித்துள்ள
சமூக குப்பைகளுக்கு தீ
வைக்கவேண்டும் !

 
பணத்தாலும்
ஏற்றத்தாழ்வான
வாழ்நிலைகளுக்கும்
மத்தியில்
கைகளை
வெறுமனே
பிசைந்து கொண்டு
கையறு நிலையில்
நின்று கொண்டு,


புதைகுழியில்
சிக்கிகொண்ட
ஒருவன்
அவ்வழியே யாராவது
உதவிக்கு
வருவார்களா
என  எதிர்ப்பார்ப்பது
போல
காத்திருப்பது
காதலின்
அழகல்ல
என்பதை
புரிந்து கொள்ளவேண்டும் !

 
காதலுக்கான
இருவரது
போராட்டத்தையும்
சமூக விடுதலையுடன்
இணைத்து  போராட வேண்டும் !

காதலின்
சுதந்திரம் என்பது
வெறும்
பூக்களை மட்டும்
பரிமாறி கொள்வதல்ல.
மாறாக
அது
தனது
நிரந்தர இருத்தலுக்கான
போராட்டத்தை
தொடர்ந்து
நடத்துவதேயாகும் ! 



Image result for a red rose in his hand   and something tears in image




கெங்காயி





கெங்காயியின்
ஆதி அந்தம்
எனக்கு தெரியவில்லை.
ஆனால் -
அம்மாயி
மண்வீட்டு சந்தில்
அவள்   மட்டும் படுத்து  கிடந்தாள்!


நான்
முதன் முதலில்
அவளை பார்த்தபோது
மிகவும்
பாவமாய் இருந்தது !
நடுத்தரவயதைவிட கொஞ்சம் அதிகம்,
இந்த வயதிலேயே
இவளுக்கு
கண் தெரியாமல் போனது
மிகவும் வியப்பாயிருந்தது.
காரணத்தை அறியும் வயது
அப்போது
எனக்கில்லை..!


தலைமுடி முற்றிலும்
நரைத்து போயிருந்தது.
புளிச்ச கழி நாரை போல...
வெள்ளையாக
அலங்கோலமாக
முகத்தை மூடி மறைத்திருந்தது..!


முகத்தில்
உதடுகளை தாண்டி
பற்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது !
பல்லை  விளக்காததால்
அது -
காரை படிந்து  போய்க்கிடந்தது!


யாராவது புதியவர்களின்
காலடி ஓசை கேட்டால்
மிக ஆவலாக
யாரது என்பாள்..!
ஏதாவது சாப்பிடுவதற்கு
போடமாட்டார்களா
என்ற
நம்பிக்கையில்...


அலுமினியத்தாலான
ஒடுக்கு விழுந்த
அவளது
பிச்சைப்பாத்திரம்
எப்போதும்
வெறுமையாகவே கிடந்தது ..!


கெங்காயிக்கு
வெற்றிலை போடும்
பழக்கம் இருந்தது!
ஆனால்...
வாங்கிகொடுப்பதற்குதான்
ஒருவரும் கிடையாது!


அவளுக்கு
கண் தெரியாததை பயன் படுத்தி
காய்ந்து போன
முந்தரிப்பூக்களை
புகையிலை எனவும்-
பூவரசம் இலையை
வெற்றிலை
எனவும்-
கொடுத்தால்...
அதை வாங்கி வாயில் போட்டு...
நன்சதின்னி மக்களா
என-
திட்டுவாள்!


கெங்காயியால்
யாருக்கும்
எந்த லாபமும் இல்லை
என்ற
ஒருமித்த கருத்து இருந்தது ..!
அந்த கெங்காயி யாரு?
அவ யாரு பெற்றபிள்ளை
என்பதை  அறிய
யாரும்
அதிக ஆர்வம் காட்டியதில்லை..!


அவரவர்களுக்கே
ஒன்றும் கிடைக்காமல்
ஆலாய் பறக்கும்போது
கெங்காயியை
யார் கவனிப்பார்கள்?
கெங்காயி
ஒரு நாள்
சுகவீனம் அடைந்தாள்..!


அவள் உடலிலிருந்து
வெளிவரும் துர்நாற்றம்
எல்லோரையும்
அருவருப்படைய செய்தது.
யாரும்
கிட்ட நெருங்கவே
தயங்கினார்கள்...
நாதியற்று போய்
நடு சந்தில்  கிடந்தாள்..!


அதோ...
அம்மணமாய்
உடலில்
எந்த துணியும் இல்லாமல்...
இறந்து போன
நாயினும்
மோசமாக...
உணர்வற்று கிடந்தாள்.


தெம்பும் திடகாத்திரமும்
இருந்தபோது
ஓடி ஓடி உழைத்தவள்.
நாடி தளர்ந்தபோது
நாறி  நிறங்குலைந்து கிடந்தாள்!
எந்த நாதி பராதியும் இல்லாமல்...




வாழ்க்கை பயனத்தில்
எந்த முகவரியும்
தெரியாமல்
வழி  தவறி வந்தவள்.
வாழ்க்கையின்
எந்த தடமும் இல்லாமல்
வெறுமனே
ஏழையின் வாழ்க்கை சூன்யமாய்
பெண்ணாய் பிறந்து
சிதைந்து கிடக்கிறாள்!
பேதை -
எவனுக்கு
முந்தானை விரித்தாளோ!...
அவனுக்கு முன்பு
இவள் போயிருக்கலாம்.
எப்போதும்
புருஷனுக்கு முன்பு
போய் சேர்ந்துடரதுதான் நல்லது
என -
எல்லோரும் சொல்கிறார்கள்!


வீட்டு விலங்குகள்
செத்துபோனால்  காட்டும்
பரிதாபம்கூட
கெங்காயி
சாகும் போது
யாரும் காட்டவில்லை..!
அப்போதே
வாழ்க்கையின் மீது
எனக்கு
வெறுப்புதான் தோன்றியது !


ஒரு நாள்
நான்  பள்ளியிலிருந்து
வீட்டுக்கு வந்தபோது
ஆயி வீட்டுக்கு முன்பு
சிறு கூட்டம்
நிற்பதை கண்டு துணுக்குற்று...
தூரத்தில்
நின்று
எனக்குள்  முடிவுக்கு வந்தேன்!


நிச்சயமாக
கெங்காயி செத்து போயிட்டா.


கைபாடை தயாரானது
நாதியற்றவர்களுக்கு  கைபாடை..!
நாலும் உள்ளவர்களுக்கு
பல்லக்கு பாடை ..!
பாடையில் கூட
வர்க்க பேதம்தான்..!


வசதி உள்ளவர்கள்  செத்துபோனால்
நிறையபேர் செல்கிறார்கள்.
ஏழை செத்து போனால்
செத்துபோனவரின்
உறவினர்கள்  மட்டுமே செல்கின்றனர்.


கெங்காயியை
சுடுகாட்டுக்கு கொண்டுபோகும்போது
மாமன் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே
கூட சென்றனர்.


அப்போதே
வாழ்க்கையை குறித்து
மதிப்பீடுகள்
எனக்குள்  மாறத்தொடங்கியது.
கெங்காயியும்
நானும்...
ஒரு தாயின்
கனிவான அரவணப்பில்
கண் துயிலும் மழலையாய்
மீண்டும்
எனது வாழ்க்கையில்
ஒருமுறை
கெங்காயியை
கண்திறந்து பார்க்க
கெங்காயி
விண்  மீனாய்...
பூவாய்..
கொடியாய்...
பறவைகளாய்..
இந்த
பிரபஞ்சத்தில்
எங்காவது பிறந்திருப்பாளா
என
இன்னும் ---
தேடிக்கொண்டுதானிருக்கிறேன்.




Image result for tamil old lady's drawing







குள்ளவாத்தியார்





குள்ள வத்தியாரிடம்
நான்
உதவியாளராக இருந்ததுண்டு..!



குள்ள வாத்தியார்
ஒன்றும்
அதிகம் படித்தவரில்லை !
அவரும்
இரண்டாவது வரை மட்டுமே
படித்ததாக
ஒரு தடவை
யாரோ
என்னிடம் சொன்னதாக
ஞாபகம் இருக்கிறது !


அந்த காலத்தில்
இலைக்கடம்பூரில்
பள்ளிக்கூடம் இல்லை !



தாழ்த்தப்பட்டோர்
பகுதியில்
ஐந்தாம் வகுப்புவரை
ஒரு பள்ளிகூடம்  இருந்தது !
ஆனால் -
அங்கு
குடி தெருவிலிருந்து
யாரும் படிக்க சென்றதில்லை!
எல்லோரும்
இரண்டு கிலோ மீட்டர்
தள்ளியுள்ள
நிண்ணியூருக்கு
ரயில் பாதையில் நடந்து சென்றனர் !


குள்ளவாத்தியார்
வாணச்சி ஆயா திண்ணையில்
திண்ணைப்பளளிக்கூடம்
நடத்திக்கொண்டிருந்தார்!
மாமன் வீட்டு கட்ட பய
அவர் பள்ளிக்கூடத்தில்தான்
படித்துக்கொண்டிருந்தான்.
அவனை
அவ்வபோது பார்க்கப்போவதுண்டு


என்னை
ஒரு கணம் உற்றுப்பார்ப்பார்!
பின்னர்-
போடா கட்டையா என்பார்!



வீட்டுக்கு வீடு
கொஞ்ச காலம் தங்கி வந்தார்!
வீட்டுக்காரர்கள்
வெறுக்க தொடங்கினால்
சொல்லாமல் கொள்ளாமல்
அங்கிருந்து
வெளியேறிவிடுவார்




பின்னர்
ஆயிவீட்டு  திண்ணையில்
கொஞ்சகாலம்
குடியிருந்தார்.
காலையில்
ஆலமரத்தில்
இலைபறிக்க செல்வார்.
அந்த இலையை
வெயிலில் காயவைத்து
பின்னர்
அதன்மீது தண்ணீர் தெளித்து
வரிசையாக அடுக்கி
பாடம் செய்து
அதன் மீது
கல்லை தூக்கிவைத்து,
இரண்டு நாட்கள்  கழித்து
அதை
ஒன்றன்பின்
ஒன்றாக
அடுக்கி
வட்ட வடிவில்  பெரிய இலையாக
தைத்து,
வரிசையாக
ஐம்பது
நூறு - என
கட்டுகளாக கட்டி தலையில் சுமந்து
செந்துறைக்கு  சென்று
கடை   கடையாக  விற்ப்பார்.



அரிசி-
குழம்புக்கு சாமான் வாங்குவார்!
அவருடைய குழம்பு
மிகவும் மிகவும் நன்றாயிருந்தது !



நேரம் கிடைக்கும் போது
முயல் பிடிக்கபோவார்!
அதை
விற்று
செந்துறை சந்தைக்கு சென்று
பன்றி  கறி  வாங்கி வந்து
சமைத்து சாப்பிடுவார் !


அவ்வப்போது
நிறைய கதைகள் சொல்வார்.
அவரை
எனக்கு நிறைய பிடித்திருந்தது !



கட்டிய மனைவி
அதே ஊரில் இருந்தும்
அதைப்பற்றியெல்லாம்
ஒரு நாள் கூட
அவர் பேசியதில்லை !



நடை  உடையாக
இருந்து வந்தவர் !
சம்பாதிக்க
திராணியில்லாததால்
தோலெல்லாம்  சுருங்கி
நடக்கவே
சிரமப்பட்டார் !




மெள்ள...
மெள்ள பொலிவிழந்து வந்தார்!
உடம்பெல்லாம்
வீங்கி கொண்டே வந்தது.
எனக்கு
மனதெல்லாம் வலித்தது!


முகமெல்லாம்
சுரந்து காணப்பட்டார்.
சோற்று குடியில்லாமல்
படுத்த படுக்கையாய் கிடந்தார்.
ஆயிகூட
என்ன வாத்தியாரே சாப்பிட்டியா?
என-
அடிக்கடி  கேட்பார்!
"இம் என்பார்
ஆனால்
கடைசியில்
குள்ளவத்தியார் என்னவானார்?
எப்படி செத்தார்?
என்பது
எனது பதிவுகளில்
எதுவும் இல்லாமல் போயிற்று !


என்னினும்
குள்ளவத்தியார்
எனக்குள்
அடிக்கடி வந்து போய்கொண்டுதான் இருக்கிறார்!




Image result for a tamil village  short man with dried leave    in his head  in drawing





நான்





எனக்கு
கிடைத்தவற்றை சாப்பிட்டு ...
எவருடனும் நட்பு வைத்து...
பள்ளிக்கூடத்தை புறக்கணித்து...
எல்லா பாடங்களிலும் தோல்வியுற்று...
விரும்பிய  இடங்களில்  சுற்றி திரிந்து...
சொந்த பந்தங்களால்
நிராகரிக்கப்பட்டு...
நிர்க்கதியாய்
நடுத்தெருவில் கையை பிசைந்து கொண்டு நின்று...
அவமானப்பட்ட
பிழைப்பு
பிழைத்து...
ஆராலையும் நேசிக்கபடாதவன்!
இந்த
உலகில்
வாழவே இடம் கிடைக்காமல்
ஊர் ஊராய் அலைந்தவன்!
என்றைக்கும்
நம்ம கதை
தேராத கதைதான்
என்ற நினைவுகளோடு
கரை சேராமல்
கவிழப்போகும் ஓடம்
இது -
என்னும்
கடுமையான
தழும்புகளை சுமந்து  நான்...


என்னை சார்ந்த
வாழ்க்கை சூழலில்
என்னை நானே மூழ்கடித்து...
எதார்த்தம்
தொலைந்த
பொட்டல் தெருவில்
எனக்கு நானே
புது புது வேடமணிந்து...
வித விதமாக
பெயர் சூட்டிக்கொண்டு...
வித விதமாக நடித்து


கண்ணாடியில்
முகம் புதைத்து
எனக்குள் நானே
என்னை கிண்டல் செய்து...
எனக்குள் நானே
என்னை அவமான படுத்தி...
எனக்குள் நானே
தகுதி படுத்தி...
அவ்வபோது
தகுதியிறக்கம் செய்து...
அவ்வபோது
தூர விலகி நின்று
உரக்க குரலெடுத்து ...
யார் யார் பேரையோ
கூவியழைத்து...
யார்  யாரோலோ
உதாசீனப்படுத்தபட்ட
சினேகதமற்ற
மனித  உறவுகளில்
மாட்டி கொண்டு
போய் சேர வேண்டிய தூரத்தை
சேரமுடியாமல்
இன்றும் -
முடிவற்ற தேடல்களோடுதான்
திசைகளற்ற யுகத்தில்
நின்று கொண்டிருக்கிறேன்..!




வயிறு எரியும்போது
சோறிட்ட கைகள் !


சினேகித்த  நட்பு !


மீண்டும் மீண்டும்
பார்க்க துண்டும்
பழகிய  பழைய இடங்கள்..!


பிரிந்து போனாலும்
சாகும்  வரை
நினைத்து
அழத்தூண்டும்
உண்மை காதல்,


உயிரே போனாலும்
நன்றி மறவாத
உள்ளத்துடன்
உயிர்த்திருக்கும் ஜீவன்
என -
பண்புகளின் சுமைகளோடு
என்னை
வடிமைத்த
இலைக்கடம்பூரை
நான்
நினைக்காத
நாளில்லை!

பொட்டார்




அவர் நடந்து போகும் பாணி
வித்தியாசமானது
அது
மற்றவர்களுக்கு
கேலியாக தெரியும்.
ஆனால் -
அவர் இந்த தேசத்தின்
ஏழ்மையின் வடிவம்.
அவர்
கடந்த காலங்களில்
ஆயி குடும்பத்தோடு மிகவும்
பரிச்சயம் ஆனவர்.
நொச்சிக்குளத்து  சின்னாயியும்
ஆயியும் களைஎடுக்கப்போவார்கள்.
கொளஞ்சியும்,
நானும்
முனியப்பாகுளத்தில்
தூண்டில் போட்டு
எங்கள்  வாழ்க்கையை
தேடி
கண்டுபிடித்துகொண்டிருந்தோம்..!



தூண்டிலை நேசித்த அளவுக்கு
படிப்பை நேசிக்கவில்லை.
என்னவோ தெரியவில்லை
இலைக்கடம்பூர்
என் அழகியல் உணர்விலும்
ரசனை தன்மையிலும்
மிகப்பெரிய மாற்றத்தை
கொண்டுவந்தது!


அடை மழை காலம் வந்தால்
போதும்
காலையிலேயே
ஓடைக்கு ஓடுவோம்..!


வடிந்தும்
வடியாமலும்,
ஓடிகொண்டிருக்கும்
வெள்ளத்தை வைத்து
பிரமாண்டாமாக
கற்பனை செய்வோம்.
ஓடை  வெள்ளம்  ஊருக்குள் புகுந்தால்
எல்லோரும்
என்னாவார்கள்?
என்று -
ஒவ்வொருவராக
கற்பனையாக சொல்வார்கள் !


உலகம் அழிந்தால்
எப்படித்தப்பிப்பது
என்பது  குறித்த்தெல்லாம்
ஆராச்சி செய்வோம்!
சுரை குடுக்கையில்
புகுந்து கொண்டால்
உலக அழிவதிலிருந்து 
தப்பித்துகொள்ளலாம்
என்பதை
அப்போதுதான்
கண்டுபிடித்தோம்..!


கேட் கடை சம்பதிடம்
காசு இருந்தாலும்
இல்லாவிட்டாலும்
கடன் வைத்து
இட்லி தின்று
பீடி வாங்கி குடித்து...


புகைவண்டி சாலையை ஒட்டிய
ஆலமரங்களில்
ஏறி விளையாடுவோம்!


பொழுதெல்லாம்
ஆடு மேய்ப்போம் !
ஆனைவாரி ஓடைகளில்
மேய்ச்சல் அதிகம் என்பதால்
ஆடுகளின் மாநாட்டினை
அங்கே நடத்துவோம் !


ஆயிரம் ஆண்டுகள்  பழமைவாய்ந்த
சூரியனார் கோவில்.
இச்சிலை மரத்தடியில்
தெரணி செடிகளிக்கிடையில்
சூரியனார் கடவுள்
பூஜையில்லாமலேயே
இனிதே
வீற்றிருக்கிறார்..!
கூடவே
இச்சிலைமரம்
குயில்களுக்கு
கூடாரமாகி போனது!
சுருக்கு வைத்து
குயில் பிடிப்போம்!


பஞ்சருக்கு
சாராயம் வாங்க
பெரியாகுறிச்சி
கீழக்குறிச்சிக்கு போவோம்..
வாங்கிய சாராயத்தில்
கொஞ்சம்  குடித்துவிட்டு
கொஞ்சம் தண்ணீரை நிரப்பிகொண்டு,
நானும்
பெரிய பயலும்
ஓட்டை சைக்கிளில்
ஊர் வருவோம்!


வித விதமாய்
நாடகம் எழுதி
திருச்சி வானொலிக்கு
அனுப்புவோம்!
நாடகம் ஒலிப்பரப்பாகும்
என்று
நாட்கள் பல காத்திருந்தோம்!
நாடகம்
ஒலிப்பரப்பாகவில்லை.
நாங்களும் கவலைப்பட்டதில்லை!



ஓட்டை சைக்கிளை
நூறு ரூபாய்க்கு
விலைக்கு வாங்குவோம்.
பழுது பார்த்து
புது புது சாமான்கள்
வாங்கி போட்டு
அழகு பார்த்து
திரும்பவும்
நூறு ரூபாய்க்கு
விற்போம்.
அத்தனை அறிவாளிகள்  நாங்கள்!



எனது உலகம்
வேறாய்  இருந்தது .
அங்கு
என்னை சார்ந்தவர்களின்
சுதந்திர சிறகுகளை
கட்டிபோட
யாரிடமும்
எந்த கயிரும் இல்லை  !


கட்டுப்பாடான
உலகத்தின்மீது
எனக்கு
கோபம்  கோபமாய் வந்தது.


இயற்கையை
கற்றுக்கொள்ள
அப்போது
எனக்கு
எந்த
ஆசிரியனும்  தேவைப்படவில்லை!

பாவாடை ஆயி மகன் பிச்சைபிள்ளை





அந்த காலத்து
பாவாடை ஆயி மகன்   பிச்சைபிள்ளை
ஐடிஐ  வரை படித்தவர்.
அவர்
ஆங்கிலம் பேசுவதை
மிக -
வியப்போடு  கேட்டிருக்கிறேன்.
பெண் வேடமிட்டு
தெரு கூத்தில்
டான்ஸ் ஆடத்தொடங்கினால்
மேடையே கலகலக்கும் !
விசில் சத்தம்
வானையே பிளக்கும்.
அவர் பேதி வந்து செத்தபோது
மிகவும்
மனம்
உடைந்து போனேன்!

பெரியாகுறிச்சி ஆயி





பெரியாகுறிச்சி ஆயி
குறுக்கே வந்தால்
காரியம் கெட்டுபோகும்
என
எல்லோரும் சொன்னார்கள்.
எனக்கு  எதுவும்
கெட்டது நடக்கவில்லை.
ஊன்றுகோலை
ஊன்றிக்கொண்டு
அவர்  இப்போதும்
எனக்குள் 
அவ்வபோது
வந்துகொண்டுதானிருக்கிறார்..!

காரையாகுளம்




காரையாகுளத்தின்
நடுவில் இருக்கிறது
குடிநீர் கிணறு.
கிணற்றை அடைய
நீண்ட அணயின் மீது வழிபாட்டை ...


கரை மீது  பெரிய
அரசமரம்.
வளைந்து நெளிந்து
தண்ணீர் வரை தாழ்ந்து கிடக்கும்
அதன் மீதேறி
குளத்தில் குதிப்பதென்றால்
எல்லோருக்கும்
கொண்டாட்டம்..!


ஏரியின் முகப்பில்
வரலாற்று பெருமைகளை
தன்னகத்தே கொண்டு
நூற்றாண்டுகளை கடந்து நிற்கும்
மாரியம்மன் கோவில்.


அந்த ஊருக்குள்ளே
நான் சின்னப்பயலாக
முதன்  முதலாக
நுழைந்தபோது
என்-
கண்ணில் விழுந்த
இந்த கோயிலின்  பிம்பம்,
இன்னும்
என் கண்ணுக்குள்ளே
அப்படியேதான்   கிடக்கின்றன !


ஓடாமலேயே
நூறு ஆண்டாய்
ஒரே இடத்தில்
அமைதியாய் உட்கார்ந்திருக்கும்
அழகிய தேர்..!
என்றாவது
ஒரு நாள்
இந்த தேர்  ஓடும்
என  நினைத்திருந்தோம் ..!
தேர் ஓடவேயில்லை.
மணிவண்ணனும்
நானும் ...
அடிக்கடி
தேரினுள்
ஒளிந்திருக்கும் காட்டுப்பூனையை
துரத்துவதுண்டு,
அதன்
அழகிய கலை நுட்பங்களை
சமூக விரோத கும்பல்
ஒவ்வொன்றாக திருடி ...
உருகுலைந்து
ஒரு நாள்
தேரே காணமல் போனது !
கைகுழந்தை ஒன்று
காணாமல் போனது போல...


காரையாகுளம்
நிறைய காதல்  கவிதைகளை
எழுதியிருக்கின்றன !
அவற்றில்
சில  அரங்கேறின.
மீதமுள்ளவை
இன்னும்
காலத்தால்
அப்படியே இருக்கின்றன..!
வயது போனபின்பும்
கல்யாணம் ஆகாமல்
காத்துக்கிடக்கும்
கண்ணிபெண்ணை போல ...


காரையாகுளம்
என்
பல்கலைக்கழகம் ! 

முத்தம்மன் குளம்





நிண்ணியூர்
எல்லைக்குள்
முத்தம்மன் குளம் இருந்தாலும்
இலைக்கடம்பூருக்கு
இதுதான்
வரவேற்பாளன் போல
இன்றும்...


அதே முத்தம்மன் குளம்
அதே இடத்தில் இருக்கிறது.
ஆனால்...
முன்பு  ஒருநாள்
அன்று இருந்த அரசமரத்தின் பொந்தில்
யாரோ மர்ம   ஆசாமிகள்
பீடி நெருப்பை
போட்டு விட்டு போக
அரச மரம் முழுதும்  எரிந்து
கீழே முறிந்து விழுந்தது.
இலுப்பை மரம் மட்டும்
மிச்சம்  இருக்கிறது..!


ஆனால்
பழைய  முகங்கள்
அதில் இல்லை.


பொழுது சாய்ந்தால்
போதும்
வாடிக்கையான  மனிதர்கள்
பலர்
வாடிக்கையாக
செந்துறைக்கு நடக்க தொடங்கிவிடுவார்கள்.


சிறு  பையை கையில்
பிடித்து கொண்டு  முருகேசர்
நான்கு மணிக்கே
சைக்கிள்
இருந்தாலும்...
இல்லையென்றாலும்...
முத்தம்மன் குளத்தின் வழியாக
நடக்க தொடங்கிவிடுவார்.


இப்போதும்
மனதுக்குள்
பசுமையாய் இருக்கிறது!
அவர் பொடி போடும் அழகு...
ரசிக்கத்தக்கது..!


டிரைவர்
துரைராஜ் மாமன்
எனது வயது கடந்த நண்பர்.
என்
இளமை காலத்திலேயே
எனக்கு
நண்பராகவும்
மாமனாகவும்
இருந்தவர்.
மாமனிதர்..!
நடபின் இலக்கணம்
துரைராஜ்..!


நாங்களெல்லாம்
கால் நடையாக
வேல் முருகன் கொட்டகைக்கு
நடந்தே போவோம்!
சினிமாவை தவிர
எங்களுக்கு
வேறு உலகம்
தெரியாமலிருந்தது.


போகும்போதும்
வரும்போதும்
முத்தமன் குளத்தில்
முகம் புதைத்து
தூக்கத்தை  கலைப்போம்.


பள்ளிக்கூடம் போகாமல்
பல நாட்கள்
முத்தம்மன் குளத்தில்
ஒளிந்து கொண்டு
குயில் பிடித்து ...
பொழுதுகளின்
திசைகளில்
எனது நாட்களை
கரி துண்டுகளால் எழுதியதுண்டு.



பள்ளிக்கு
ஒரு நாள் விட்டு
ஒரு நாள்
போகும் போதெல்லாம்
ஒரு -
ஆசிரியனை பார்ப்பது  போல
தினந்தோறும்
முத்தம்மன் குளத்தை
பார்த்து சென்றிருக்கிறேன்.


ஆனால்...
இன்றைய முத்தம்மன் குளத்தை  சுற்றிலும்
புதிய வீடுகள் முளைத்திருக்கின்றன.
எப்போதும்
பரப்பும்
ஆரவாரமும்   சூழ்ந்து
பழைய
அமைதியும்
மவுனமும் செத்து கிடக்கின்றது ..!
என்
பழைய முத்தம்மன் குளத்தை காணவில்லை..!

மூங்கில் தோப்பு




அந்த
வடக்கு வேலியோரத்தில்
ஒரு  மூங்கில் தோப்பு


கோடைகாலத்தை தவிர
மற்றைய காலங்களில்
யாருடைய கவனத்தையும்
அவ்வளவாக
ஈர்த்ததில்லை..!


புரட்டாசி
ஐப்பசி மாதங்களில்
விரகு ஒடிக்க
அவ்வபோது
ஒரு சிலர்
இங்கு வரும்  போது
அழுத்தமாக
இதை கவனிக்க
யாரும் கவனிப்பதில்லை.


எப்போதும் போலவே
எந்த சலனத்தையும்  ஏற்ப்படுத்தாமல்
அது
அப்படியே கிடக்கிறது..!


கோடைகாலமானாலும்
குளிர்காலமானாலும்
குரங்குகளின்
கூட்டம் ஒன்று
இந்த தோப்பில்
வாழ்ந்து வருகிறது..!


என்னதான்
கவண்  என்றும்
கல் என்றும்
துரத்தினாலும்
போக மறுக்கிறது !
அழையாமல் வந்த  விருந்தாளி
போகாமல்
அடம் பிடிப்பதைபோல,


காலப்போக்கில்
அதை யாரும்
அவ்வளவாக   கண்டு கொள்வதில்லை !
எந்த தொந்தரவும் இல்லாமல்
வந்து போகிறது..!



கூடவே
செம்போத்து பறவைகள்
ஒரு சோடி
அதே  மூங்கில்  தோப்பில்
மூங்கில் சருகுகளை  கொண்டு
கூடுகட்டியிருக்கின்றன..!

அடிக்கடி
கூவி ...கூவி
தனது இருத்தலை
காட்டி கொள்கின்றன.

நாங்கள்
அவ்வபோது
அலக்கு கழியால்
அந்த கூட்டினில்  குத்தி
அது இருக்கா...
இல்லையா
அல்லது
வேறு எங்காவது ஓடிவிட்டதா
என -
ஆராய்ச்சி  செய்துவந்தோம்..!



யாரும்
இந்த  தோப்பினில்
நெருங்க முடியாத அளவிற்கு
முட்களால் சூழப்பட்டிருக்கிறது
ஆனால்...
இதன்  கீழ் இருந்த முட்களை
சுத்தம் செய்து
மூங்கில் மேலே
ஏறுவதற்கு
கணுக்களால் படி அமைத்து
முள் வெட்டியிருந்தேன்..!


அடிக்கடி
அந்த மூங்கில்கள்  மீதேறி
சுற்றிலும் பார்ப்பதில்
ஒரு வித தூண்டுதல்
என்னை
உள்ளுக்குள்
இருந்து வந்தன !

வடக்கு திசையை நோக்கி
உற்று வெறித்து  பார்ப்பதுண்டு
எங்கு பார்த்தாலும்
மரங்களை மூடி நிற்கும்
நீல நிற புகை மூட்டம் !

ஆட்கள் நடமாட்டமில்லாமல்
இயற்கை
நிசப்த்தத்தில்
ஆழ்ந்து கிடக்கும்.


புகையை கக்கிகொண்டு
சென்னையை நோக்கி செல்லும்
அந்த கால புகை வண்டி
விட்டு செல்லும்
கறிய புகை
வண்டி சென்றபின்பும்
பல  கிலோ மீட்டர் தூரம்
வாலாக தெரியும்!



இலைகள்  உதிர்ந்தும் ... உதிராமல்...
நிற்கும்
வம்பரை மரங்கள் !
அவற்றில் உட்கார்ந்து கொண்டு
உர்... உர்...
என  குரலெழுப்பும் மணிப்புறா.


எங்கு நோக்கினும்
மரங்களை ஒட்டி
பரந்த பொட்டல் வெளிகள்...
கோடை வெயிலின் வெம்மை தாளாமல்
அனலாய் கொதிக்கிறது !
ஆங்காங்கே
கானல் நீர் தெரிகின்றன!


காக்கை குருவிகள்
நடமாட்டம்  கூட கிடையாது
ஒளிவதற்கு நிழலே கிடைக்காததால்
நீண்ட தூரம்
எங்கோ சென்று விட்டன!



ஆனாலும்
எங்கோ  தூரத்தில்
அக்கக்கா குருவிகள் ..!

தன் அக்காளில்
ஒருத்தி
நீண்டகாலத்திறுக் முன்பு 
ஆற்றில்
தண்ணீர் குடிக்கும் போது
தண்ணீரோடு
ஆற்றினில்
அடித்து செல்லப்பட்டதை
நினைத்து
இன்றுவரை 
அழுது கொண்டிருக்கும் !


வேலிகளில் பர்ந்திருந்த
முசுட்டை கொடி கூட
வெயில் தாங்காமல் 
இலைகள்  கூட  உதிர்ந்து விட்டன!
அதனிடையே முந்தரிப்பழத்தைகவ்வி கொண்டு
அணில்கள்கூட்டுக்கு போகின்றன!



மண்  குடத்திலே
வைத்திருக்கும் தண்ணீர்
போதவில்லை!
அருகிலிருக்கும்
மூக்காயி
தாத்தா கிணற்றுக்கு
தண்ணீர் மொள்ள
ஆயி போக சொன்னாள்!


இடிந்த பாழடைந்த மண் கேணி
சுற்றிலும்
சிதைந்த மண் படிகட்டுகளை கடந்து
ஐம்பதடி
கிணற்றின் அடிக்கு சென்றால்,
காய்ந்த சறுகு குவியல்களுக்கிடையில்
சிவப்பு நிறத்தில்கொஞ்சூண்டு  தெரியும்
குழம்பலான  தண்ணீரை
மண்  குடத்தில் நிரப்பி
ஒரு சாகசமான
சர்க்கஸ்காரரைப்போல
மேலேறி வந்து
கொளுத்தும் பொடியில்
அரை பர்லாங்க் நடந்து வந்து
ஆயியிடம் கொடுத்தால்...



அந்த தண்ணீரால்
சொத்தை  துவரையை
அவிப்பாள்!
ஆளுக்கு கொஞ்சம்
கைகளில் கொடுப்பாள்!
பத்தும் பத்தாமல்
வாங்கி  தின்று
குப்பை கலந்த
தண்ணீரை குடிப்போம்!


வயது வேறு பாடின்றி
அணில்
முயல்  வேட்டையாடி
மிள்காய் கிள்ளி போட்டு
அவித்து சாப்பிட்டு ...



தரையோடு
தாழ்வாக கிடக்கும்
மாமரத்தில்
ஊஞ்சல் கட்டி,
ஒய்யாரமாய்
ஊசலாடி,
பசித்தால்
அதே மாமரத்தில்
மாம்பழம் பறித்து சாப்பிட்டு
பசியாரி...


மாமரத்தின் கீழே
பல்லாங்குழி வெட்டி,
ஆட்டாம்புழுக்கை
புளியங்கொட்டைகளால்
பல்லாங்குழி விளையாடி...

தோற்றவர் கைகளை இழுத்து
தரையில்  வைத்து
மற்றவர்கள்  பிடித்து கொள்ள...
வெற்றிபெற்றவர்கள்
தனது கைகளால்
தோற்றவர் கைகள் மீது
மங்கு மங்குன்னு குத்துவார்கள்!
தோற்றவர்கள்
செல்லமாக வலியில் துடிப்பார்கள்!

வாழ்க்கை
எந்த ஆதாயத்தையும்
எதிர்பாராமல்
எங்கள்  முன்னே
ஏகாந்தமாய் கிடந்தது !

உயர்திணை ஈர்க்காத
என்னை 
அக்றினையோடு
சிநேகம் கொள்ள தூண்டிய
என் சூழல்
என்னை  எப்போதும்
அடையாளப்படுத்தி கொண்டிருந்தன.


உயிர்த்தலுக்கான
வாழ்க்கை போராட்டம்
தன்
காலச்சூழலில்
என்னை
இடம் பெயர்த்தன!
   


என்னதான்
வாழ்க்கை
கடந்து போன சம்பவங்களில்
மூழ்கடிக்கப்பட்டாலும்,


அந்த மூங்கில் தோப்பும்
அதனை     ஒட்டிய
மாமரத்தயும் 
மறக்கமுடியாமல்
நேரம் கிடைக்கும் போது
நினைத்து  வந்திருக்கிறேன் !


சில காலம்
எனக்கும்
மூங்கிலுக்கும்
இடைவெளிகள்
அதிகமாகி கொண்டே சென்றன!


ஊரிலிருந்து
ஆயி வரும்போதெல்லாம்
மூங்கில் தோப்பு பற்றி
அடிக்கடி கேட்டு வைத்தேன்!


தனக்கு  வயதானதை போல,
மூங்கிலுக்கும்
வயதாகி போனதால்
பட்டுப்போயிகொண்டு வருவதாகவும்
சொல்லிக்கொண்டுவந்தாள்!


ஒரு நாள்
ஆயியும்
செத்து  போய்விட்டாள்!
எனினும்-


கூடவே
ஆயியையும்
மூங்கில் தோப்பையும்
என்
பதிவுகளிலிருந்து
அடிக்கடி 
புதுப்பித்துக்கொண்டே
வந்திருக்கிறேன் !



ஒரு நாள்
ஊரிலிருந்து வந்த 
அத்தையிடம்
மூங்கில் மரம் என்னாச்சு என்றேன்!



அந்த இடத்தில்
தற்போது சுண்ணாம்புக்கல் சுரங்கம்
இருப்பதாக 
அத்தை    சொன்னாள்..!


ஆனாலும்
அந்த
ஒற்றை மூங்கில் தோப்பு...
ஒற்றை பனைமரம்...
சூரியனார் கோவில்...
இன்னும்
எனக்குள்..
இருந்துகொண்டுதானிருக்கின்றன.

                                         

ஆயா

சிலம்பூர்  ஆயாவே
உனக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கம் !



எனது
ஜீவித்தலின்
ஆதிமூலம்   நீ !

 
உனது
வயிற்றில்  பிறக்காத
காரணத்தால்
என்னை
உன் பிள்ளையில்லை
என -
ஏற்றுக்கொள்ள
நீ
மறுத்ததில்லை ..!


பெற்றவளுக்கு
இருந்த
பெரிய பொறுப்பை காட்டிலும்
நீதான் தான்
என் எதிர்காலம்   குறித்து
அதிகம்
கவலைப்பட்டாய் !
பாவம்
நீதான்
எனக்காக  எவ்வளவு
துன்பப்பட்டாய் !


வாழ்க்கை  நிராகரித்த
சமூகத்தின்
கடைகோடியில்
மதிப்பிழந்த  நாணயமாய்
கிடந்த என்னை
சமூக சந்தையில்
நான்
நல்ல  விலை போக
நீ
தினம் தினம்
செத்து பிழைத்தாய் !


உயிர்  கொடுத்தவள்
ஒருத்தி,
அதை
உயிர்ப்பித்தவள்  நீ ..!


கால் படி
அரிசி வாங்கி
கஞ்சிவைத்து
என்னை மட்டும்  சாப்பிட சொல்லி  விட்டு
நீயும் -
உனது   மகளும்
சோள தவிட்டை
முருங்கை கீரையில்  போட்டு
சுண்டி  தின்னது
எனக்கு
இன்னும்
நினைவிருக்கிறது !



பேரன்
எனக்காக
நீ  எத்தனை தடவை
உன் மகனிடம்
அவமானப்பட்டாய் !



ஒருநாள்
தலையில்
மண் குடத்தில்
தண்ணீர் சுமந்து கொண்டு வரும்போது,
உன்  தள்ளாத
வயதைக்கூட
நினைத்துப்பார்க்காமல்
நீ -
எனக்கு  முன்னுரிமை  கொடுத்து
வளர்ப்பதை
பொறுக்கமாட்டாத
 உன் மகன் 
நீ -
தலையில்  சுமந்து நின்ற
 மண்  குடத்தை உடைத்தார் !
குடம்  உடைந்து
தண்ணீரில்
முற்றாக நனைந்தாய் !
நான்
கண்ணீரில்  நனைந்தேன் !


உனது  ஒளியில்
உயிர்வாழும்
உயிர் நான்


நீ
ஒரு பலகீனமான  பெண்மணி !
நீ
வைத்திருக்கும்
காசை பிடுங்க
உன்னிடம்
நைசாக பேசினால் போதும்
வைத்திருக்கும்
எல்லா காசையும்
என்னிடம்  கொடுப்பாய் !
வெடுக்குன்னு
பிடுங்கி கொண்டு 
சினிமா பார்க்க   ஓடிவிடுவேன்..!



படிப்பை பற்றி
உனக்கு ஒன்றும்  தெரியாது !
ஆறாம்  வகுப்பு படிக்கும்
உன் பேரனாகிய   நான்
பெரிய
கலெக்டருக்கு
படிப்பதாக
நினைத்து கொண்டிருந்தாய் !


தள்ளாத வயதிலும்
களையெடுக்க போனாய் !
தழைக்கட்டு சுமந்தாய் !
வஞ்சினபுரம்  வரை
வரகு அறுக்க போனாய் !
மாம்பழம்
விற்க போனாய் !
நானும்
கூட  வந்திருக்கிறேன் !


ஒரு
குடிகாரனுக்கு
வாழ்க்கை ப்பட்டு
நாசமாய் போன
தன்   மகளின்  வாழ்க்கைக்காக
காலங்காலமாக
ரத்தம் சிந்தி 
ஓடாய்  உழைத்து
உருகுலைந்து  போனாய் !



மகன்கள்  குடிகாரர்கள் !
மகன்கள்  பெற்றெடுத்த
பேரப்பிள்ளைகள்  குடிகாரர்கள் !
மருமகன்  குடிகாரன் !
மகள்  வாழாவெட்டி !
நரகத்தின் மத்தியில்
வாழ்நாளெல்லாம்
செத்து பிழைத்தாய் !
குடிகாரர்களின்  கொடுமை
நீ -
சாகும் வரை  தொடர்ந்தது !




கடுமையான
உழைப்போடு பிணைக்கப்பட்ட  நீ ...
என்பது ஆண்டுகள்
இடை விடாமல்  உழைத்திருக்கிறாய் !
அதில்
நாற்பது ஆண்டுகள்
உனது   பிள்ளைகளுக்கும் .
மீதம்
 நாற்பது   ஆண்டுகள்
எனக்காகவும்
எனது 
பிள்ளைக்களுக்காகவும் 
உழைத்திருக்கிறாய் !



ஓய்வை  பற்றி
நீ பேசியதாக
எனக்கு  நினைவில்லை!
சும்மா
உட்கார்ந்து  கிடந்தால்
எப்படி பிழைக்க முடியும்
என -
நீ  சொல்லுவாய் !
குந்தி  தின்றால்
குன்றும்  கறையும்
என்பாய் !


தனக்காக
எதுவும் வைத்துகொள்ளாதவள் !
எனக்காக
அனைத்தையும்  இழந்தவள்!
இறுதிவரை
இழப்பதற்கு  ஒன்றுமில்லை
என -
அவள்  எண்ணவில்லை !
ஏனெனில்
உலகில்
எல்லையற்ற
அவளின்  அன்புக்கு
 ஈடு  எதுவுமில்லை !

நிற்கதியாய்  நின்ற
என்னையும் ...
என்னை பெற்ற வளையும் ...
ஆதரித்து
அடைக்கலம் கொடுத்த
ஆலமரம்  அவள்.



அவள்
எந்த யுகத்தில்  பிறந்திருக்கிறாள் ?
எங்கே      இருக்கிறாள் ...?
நிகழ் காலத்தின்
வாழ்க்கை  நெருக்கடியிலும்
அவளைக்குறித்த
எனது -
பிரக்ஞ்சையிலிருந்து
என்றும்
பிரிக்க இயலாத
இரத்த உறவில்
தினம் தினம்
என் ஆயாவுக்கான
என்  தேடல்கள்  தொடர்கிறது..!

அப்பாவுடன் சிறு உரையாடல்


 
அப்பா என்னை மன்னித்துவிடு !
எனக்கு அப்பாவான
உன்னை
ஒரு நாளும்
நான் அப்பா  என அழைத்ததில்லை!

அப்படி
அழைக்கவில்லையே
என ஒரு நாளும்
நான்
உள்ளுக்குள்  வருந்தியதில்லை !


அந்த ஆசையும்
எனக்கு வந்ததில்லை !
மிக சின்ன வயதில்
என்னை வாழ்க்கை நெருக்கடிக்குள்
தள்ளி
வாழ்க்கையில் 
ஏக்கத்தையும்
நிரைவேராத  ஆசையையும்
உண்டாக்கி-
என்னை   கனவு தேசத்தில்
தள்ளி சிறை வைத்த
உன்னை
எப்படி
அப்பா  என்று
அழைப்பது?   


எனக்கு
நிறைய நினைவிருக்கிறது.
என்னிடம்
என்றாவது
ஒரு நாள் கூட
என்பெயரை
நீ அன்பாக அழைத்ததுண்டா?


என்னை
ஒரு  எதிரியை
பார்ப்பது போலத்தான்
நீ
பார்த்தாய்!



ஒரு  நாளாவது
என்  தோளை தீண்டி
நீ-
பார்த்ததுண்டா?



உன் தோளில்
என்னை
சுமந்தது சென்று
கடை தெருக்களில்
மிட்டாய் வாங்கி தந்ததுண்டா?



ஒரு நாள் கூட
நான் படித்தேனா... இல்லையா
என
நீ
என்னை கேட்டதுண்டா?



உன் பஞ்சணை
வாழ்க்கைக்காக
எங்களை
ஊருக்கு ஊர்
பஞ்சம் பிழைக்க போக வைத்தாய் !



நீ
என்னை  அடித்து துரத்தியதால்
நான்
ஊர் ஊராய்
சுற்றி திரிந்தேன் !



என் மீது அன்பே இல்லாத  உன்மீது
எனக்கு
அன்பே  இல்லாமல் போனது !



நீ
எப்போது சாவாய்
என
அடிக்கடி
நினைத்து வைத்தேன் !




எப்போதும்
உருட்டலுக்கும்
மிரட்டலுக்கும்
இடையேதான்
என்னை போட்டு
வறுத்தெடுத்தெடுத்தாய்!





நான்கு  வயதில்
பெற்றவளிடமிருந்து
என்னை பிரித்தெடுத்தாய்!




உன்னை  பெற்றவளிடம்
என்னைதாரை வார்த்தாய்!
உன்னை பெற்றவளும்
உன் தொல்லை தாங்காமல்
காடு போய் சேர்ந்த பின்பு,
என்னை
பெற்றவளையும் -
என்னையும் -
வீட்டை விட்டு
துரத்தியடித்தாய்!

நங்கள்
குடியிருக்காத  வீட்டில்
ஊரிலுள்ள புறம்போக்குகளை
வைத்துகொண்டு
சீட்டு கிளப் நடத்தினாய் !


ஒன்பது வயது வரை
அம்மா முகம்
அறவே மறந்து போனது
அம்மாவுக்கும்
மகனுக்கும்
ஈடுசெய்யமுடியாத 
இடைவெளியை உருவாக்கினாய்!

அது -
எவ்வளவு பெரிய ஆபத்து
என்பதை  அறியாத
மடையனாய்  இருந்தாய் !


உன்னை
அழைக்காததை போலவே...
இன்றுவரை
என்னை பெற்றவளையும்
நான்
அம்மா
என
ஒரு நாளும் அழைத்ததில்லை !


அது எவ்வளவு
துரோகம்  தெரியுமா ?
அந்த  குற்ற உணர்ச்சியே
என்னை
கூட இருந்த கொல்லும்
வியாதியாய்
இருந்து வருகிறது !

அதற்கு
பொறுபேற்க வேண்டிய
முழு முதல்  குற்றவாளி
நீதான்!



ஒரு
மகனை
மகனாக நடத்தாமல்
ஒரு -
தெரு நாயாக நடத்தினாய்!



சொந்த பந்ததை  தேடி
சோற்றுக்கு
அலையவிட்டாய் !


ஒரு
ஜிகினா பூச்சுக்காக
சொத்து பத்துகளை  விற்றாய் !
ஊர் ஊராய்
சுற்றுலா சென்றாய்!
ஊதாரியாய்
செலவு செய்தாய் !



பிள்ளை பெண்டாட்டி
உனக்கு மறந்தது போனது !
மானம்   வெட்கம்
என்பதைபற்றியெல்லாம்
உனக்கு  கொஞ்சம்  தெரியாமல்
போயிருந்தது !



உன் சந்தோஷத்திற்காக
என் எதிர்காலத்தை கொன்று
குழிதோண்டி புதைத்தாய்!


தினமும்
குடித்துவிட்டு வந்தது
உன் மனைவியை
தலை முடியை இழுத்துபோட்டு
அடித்து
தொண்டை குழியில்  காலால் மிதிப்பாய் !
நான் பயந்து கொண்டு
கள்ளி  வேலிக்கடியில்
ஒளிந்து கொண்டு
துரத்திலிருந்துகொண்டு பார்ப்பேன் !


அம்மாயி... அம்மாயி ...
என கத்திக்கொண்டு
உதவிக்கு
பாசாளத்தார் வீட்டு
ஆபரணத்து
அம்மாயியை
அழைக்க ஓடுவேன் !


அண்டை வீட்டு
அம்மாயி காப்பாற்ற வரும்
இடைவெளியை
பயன்படுத்தி
நானும்
என்னை பெற்றவளும்
அங்கிருந்து
தப்பித்து ஓடுவோம் !


துன்பம் தொலைந்தது
என-
நீ சந்தோஷப்படுவாய் !



சினிமாவில் வருவதை
போல
என்றாவது
ஒரு நாள்
உன்னை  பழிக்கு பழி வாங்க வேண்டும்
என
நினைத்திருந்தேன் !




ஆனால்
நீயோ
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி
ஒரு நாள்
தானாகவே
நடு தெருவுக்கு வந்தாய் !



எனினும்
கடைசிவரை
நீ குடிப்பதை நிறுத்தவேயில்லை !
ஆரம்பத்தில்
நீ
மதுவை குடித்தாய் !
மது
கடைசி வரை
உன்னை குடித்தது !




எப்படியோ
நாங்கள்  வளர்ந்தபின்பும்
எங்களை
ஊரில் கடைசிவரை
தலை நிமிர்ந்து நடக்கவிடாமல்
அவமானப்படுத்திவந்தாய் !




சின்ன வயதில்
உன்னைகண்டு
பயந்து
ஒடி ஒளிந்தேன் !
வளர்ந்த பின்பு
கடைசி காலத்திலும்
நீ-
என்னை அருவருப்பாக
பேசுவதை  தவிர்க்க
ஒடி ஒளிந்து வந்தேன் !



என்
அவல நிலையை  கண்டு
என் பிள்ளைகள்
சங்கடப்படுவதை
எண்ணி
ஒவ்வொரு நாளும்
உள்ளுக்குள்  வருந்தியிருக்கிறேன் !



இடையிடையே
அவ்வபோது
காணாமல் போவாய் !
திடீரென
ஒரு நாள்
தரிசனம்  தருவாய்  !



அது போலத்தான்
பல நாட்கள் காணாமல் போய்
ஒருநாள்
திடீரென
உன்னை பார்த்து
அதிர்ந்து போனேன்!




உன் பழைய தோற்றமெல்லாம்
கரைந்து போய்,
எலும்பும்  தோலுமாய்
என்னிடம்
வந்து நின்று
எனக்கு யாரும்
சோறு போட மாட்டேன்
என்கிறார்கள் என்றாய் !




கடைசிகாலத்தில்
உன்னை வீட்டில் வைத்து
உனக்கு
சோறு போட சொன்னேன் !




கறிக்குழம்பு
வேண்டுமென்றாய்.
வாங்கிகொடுத்தேன் !
அதை -
ஏக்கத்துடன் மட்டும்தான்
உன்னால்  பார்க்கமுடிந்தது.
ஆனால்
சாப்பிடமுடியவில்லை!


ஆனால்
அடுத்தவர் சுமையை
சுமந்து பழகாத  உன்னை
உன்    மனைவியே
கடைசி காலத்தில்
வேண்டாத சுமையாக நினைத்தார்!



எனது
நிர்பந்தத்தில்
என் மனைவி
உன்னை பராமரித்து
புண்ணியத்தை தேடிகொண்டாள் !


ஆனாலும்
அப்போதும் கூட
உன்னால் குடிக்காமல்
இருக்கமுடியவில்லை !



எனக்கு தெரியாமல்
குடித்து வந்தாய்!
ஒரு நாள்
மரணத்தின் விளிம்பில்
சுய நினைவை இழந்து போனாய் !




ஒரு காலத்தில்
மிகவும் சீரும்  சிறப்பாக
வாழ்ந்த  நீ,
ஒவ்வொரு நாளும்
நீ
படுக்கையில்
கோழிக்குஞ்சு சுருண்டு கிடப்பதை போல
கிடப்பதைகண்டு
எனக்குள்
என்னவோ போலிருந்தது !




எந்த கூரை வீட்டில் பிறந்து
எந்த கூரை வீட்டை
எனக்கு
கடைசி வரை பரிசாக,
 பொக்கிஷமாக  தந்துவிட்டு போனாயோ...
அந்த கூரை வீட்டிலேயே
ஒரு நாள்
விடிகாலை கண்மூடினாய்!


எதற்காகவும்  ஒருநாளும்
அழுது பழகாத
நான்-
உன்னை  முழுதாக மன்னித்து
உனக்காகவும் சற்று அழவில்லை.
அழுகை என்பது
பலகீனத்தின் வெளிப்பாடாகும் !



நான்
உன்னை
மன்னித்தாலும்,
ஆனால் 
உன்மனைவி
கடைசிவரை
உன்னை  மன்னிக்கவில்லை !



உன் இறுதி பயணம்
நீ நினைத்து பார்க்காத அளவுக்கு
மிகவும்
சிறப்பாகவே  இருந்தது !



ஆண்டு
ஒன்று முடிந்துவிட்டது.
உன் நினைவு நாளில்
உன்னை நினைவு   கூற்கின்ற
அளவுக்கு 
நீ-
என்ன  சாதித்தாய்
என்பது
எனக்கு இன்னும்
தெரியவில்லை !


ஆனாலும்
என் பிள்ளைகள்
என்  கடைசி காலத்தில்
நீ
என்னை
தவறாக  நடத்தியதை போல...
அவர்கள்
என்னை
தவறாக நடத்த கூடாது
என்பதற்காவது
உன்னை
நான்-
நினைவு கூர்ந்தே  ஆகவேண்டும்
என்ற  நிர்பந்தத்தில்
சொல்கிறேன்...


அன்பில்லா
தந்தையே
என்னை
மன்னித்துவிடு !




இனி-
கண் மூடித்தனமாக  குடித்துவிட்டு
வேட்டி  ஒரு பக்கம்
இடுப்பில்  இருக்க..
மறுப்பக்கம்
தரையில் இழுபட ...
தெருவில்
செல்ல மாட்டாய் !



ஊரிலுள்ள
தெரு  நாய்களெல்லாம் 
இனி
உன் பின்னால்
குறைத்துக்கொண்டே வராது !




பல பேருக்கு
இனி
இரவு தூக்கத்திற்கு
இடைஞ்சலில்லை !
அமைதி  செத்துப்போன
தெருக்களுக்கு
உன்னால்
இனி விடுதலைதான் !




அதை செய்கிறேன்!
இதை செய்கிறேன்!
என -
கண்ட  கண்ட நபர்களிடம்
இனி
பணம் வாங்கமாட்டாய் !
அதனால்
உன்னை
யாரும்
திட்ட மாட்டார்கள் !



உன்
மனைவியை
இனிமேல்
நீ  -
தேவடியா
குச்சிகாரி
என திட்ட மாட்டாய் !


எப்போது பார்த்தாலும்
இது உருப்பட்டாது!
தேறாது
என -
என்னை  சபித்து ... சபித்து
இனி
என்
தன்னம்பிக்கையை குலைக்கமாட்டாய் !




உன்னைக்கண்டு
பயந்து ஓடி  ஒளிந்துகொள்ளும்
உன் சொந்த பந்தமெல்லாம்
இனி -
நிம்மதி பெருமூச்சுவிடும் !




இனி
உன்
ஒவ்வொரு
தெவிசத்திலும்
எந்த ஆபத்துக்களுமில்லாமல்
உன்னை நினைத்து பார்ப்போம் !




நீயும்
தேவையில்லாமல்
எங்கள்
நினைவுகளில்
வந்து அடிக்கடி 
தொந்தரவு செய்ய   மாட்டாய்!




அப்பப்பா !
எனினும்
இந்த
ஒரு பிறவி மட்டும்
போதாது    தந்தையே !
உனது  இடம்
வெற்றிடமாகவே உள்ளது !
இனி
அடுத்த 
பிறவியிலும்
ஒரு
வாய்ப்பிருந்தால் ...
மீண்டும் நானே   உனக்கு
மகனாக  பிறந்து
மேற்கண்ட
இம்சைகளை
நானும்
என்னை பெற்றவளும்
சேர்ந்து அனுபவிக்க வேண்டும் தந்தையே  !

அன்னை



அன்னையே! 
இப்படி  சொல்வதற்கு
உனக்கு
எப்படி மனது வந்தது !


நன்றி கெட்ட  பயலே
என
என்னை இரக்கமே இல்லாமல்
பேசுகிறாய் !




எந்தவிதத்தில்
நான் நன்றிகெட்டு போனேன்
என-
உன்னால் கூற முடியுமா?



உனக்கு
பிள்ளையாய் பிறந்ததை
இல்லையென சொல்ல சொல்கிறாயா?
அல்லது
ஒரு  பிள்ளையாய்
உனக்கு செய்ய வேண்டிய
தார்மீக கடமையை
செய்யவில்லை
என சொல்கிறாயா?


ஒருவகையில்
உண்மைதான்!
உனக்கு  நான்
என்ன செய்துவிட்டேன்?
ஒன்றும் செய்யவில்லை !
ஒரு  மகனாய்  பிறந்து
ஒரு  தாய்க்கு
செய்ய வேண்டிய
நன்றிகடனை
இன்னும்
செய்யவில்லைதான் !


மாறாக
உன்னைவிட்டு
ஆகாயத்துக்கா 
உயர்ந்துவிட்டேன் !
அப்படி
நீயில்லாமல்
உயர்ந்தால்
அதில்
என்ன உயர்விருக்கிறது ?



உனது
வாழ்க்கையின் துவக்கம்
ஒன்றும்
அவ்வளவு  சிறப்பாக அமையவில்லை!



வெறும் சமூக தகுதியை
வைத்து
உன்னை ஒருவனுக்கு
கலயாணம் கட்டி கொடுத்தார்கள்!

அவன்
நன்றாயிருந்து
ஒரு நாள்
குடிகாரனாகிபோனான்.
உன் வாழ்க்கை
புயலில் சிக்கிய படகாகி போனது!


எல்லாப்பெண்களையும் போல
விதவிதமான
வண்ண  கனவுகளுடன்
அவன் கரம் பிடித்த
நீ -
நாளடைவில்
கண்ணாடியாய் நொறுங்கிபோயிருப்பாய் !


வாழ்க்கை
உனக்கு புதிதாய் இருந்தது.
அவனுக்கு
இது
இரண்டாம்  வாழ்க்கை
பயணமாய் இருந்தது !



உனக்கு
ஒரு கணவன்
என்ற  பங்களிப்பு 
ஒன்றை  தவிர
வேறு-
அவரால்
வேறு உனக்கு என்னப்பயன் ?
ஆனால்
தாய்மையின்
தனித்துவத்தின் சுகத்தையும்
துக்கத்தையும்
நீதான்
அனுபவத்திருப்பாய்!



அவர்
ஒருத்தியை வைப்பாட்டியாக
வைத்து கொண்டு
அவளை
மனைவியைகாட்டிலும்
கூடுதலாக மரியாதையாக நடத்தினார்!



மனைவி
உன்னை-
வைப்பாட்டியை காட்டிலும்
கேவலமாக நடத்தினார்!



வைப்பாட்டியின்
கண்ணில்
நீர் வரக்கூடாது என்பதற்காக
உன் கண்ணில்  இரத்தம்  வடிய விட்டார்
உன் கணவர் !

வைப்பாட்டியின்
ஜிகினா பூசிய முகத்திற்காக
அனைத்து சொத்தையும்
விற்றுதீர்த்தார்!



நம்மை
நடுத்தெருவுக்கு கொண்டு வந்து
ஊரெல்லாம்
பிச்சை எடுக்க வைத்தார் !



வாழும் காலத்திலேயே
தினம் தினம்
சாவின் கொடுமையை
உன்னையும் என்னையும்
அனுபவிக்க வைத்தார் !



ஊரிலுள்ள பிள்ளைகளெல்லாம்
பள்ளிக்கூடம் போய்கொண்டிருந்தபோது,
உன் கணவர்
உனக்கு செய்த கொடுமைக்கு பயந்து
தெருவுக்கு தெரு பயந்து
ஓடிக்கொண்டிருந்தேன்!


உன் கணவருக்கு
படிப்பைப்பற்றி
ஒன்றும் தெரியாது!
அதனால்தான்
உன் கணவருக்கு
என் படிப்பு வீணாய் போனதைப்பற்றி
கடைசிவரை
எந்த குற்ற உணர்ச்சி இல்லாமல் போனது !



அவருடைய
சந்தோஷமே
அவருக்கு பெரிதாய் போனது!
அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தும்
மனது
அவருக்கு இல்லாமல்  போனது !



ஒரு குடிகாரன்
தன்னை மட்டும் அழித்துக்கொள்வதில்லை !
மாறாக
மூன்று
தலைமுறைகளையும்
சேர்த்தே அழிக்கிறான் !

உனது கணவர்
முதலில்
என்னையும்,
அடுத்து
என் மகன்களையும்,
அதற்கடுத்து
என் பேரப்பிள்ளைகளையும்,
மொத்தத்தில்
மூன்று தலைமுறைகளை சேர்த்து
அழித்த குற்றவாளி  அவர்!



ஒரு இடத்தில் கூட
நிலையாக தங்காமல்
ஊர் ஊராய்
ஒரு யாசக கூட்டமாய்...
நீயும்..
நானும்...
சுற்றியலைய
பள்ளிக்கூட லட்சியமெல்லாம்
பின்னுக்கு தள்ளப்பட்டு,
வயிற்றுப்பிழைப்பே
பிரதானமாகி போனதால்...


நீயும் நானும்
ஒரு ரூபாய்...
இரண்டு ரூபாய்க்கு...
களையெடுப்பு
பணிக்கு சென்று
வயிறு வளர்த்தோம் !



எனினும்
அவ்வப்போது
பள்ளிக்கூடம் இருக்கிறதா ?
அல்லது
அதை
காக்கை குருவி ஏதாவது
கவ்விக்கொண்டு ஓடிவிட்டதா?
என
எப்போதாவது போய் பார்ப்பதுண்டு!



இவன் படித்து
பெரிய ஆளாகி
தன்னை உட்காரவைத்து
சோறு போடுவான்
என
நீ-
நினைத்ததாக தெரியவில்லை!



குண்டி துடிக்க வைத்து
கொலைப்பட்டினியில் சாகடித்த,
உன் புருஷனை
என்றாவது ஒரு நாள்
உன் கண்ணெதிரிலேயே
நான் அடிக்க வேண்டும்
என
நீ-
எனக்குள்
சொல்லி சொல்லி
சூடு குறையாமல் வைத்திருந்தாய்!


ஒரு நாள்
உன் கணவனை
உன் கண்முன்னாலேயே
அடித்தேன்!
நீ
வருத்தப்படவில்லை!
மாறாக
மகிழ்ந்தாய்!
எனது மூலமாக
உன் கணவனை
நீ
பழித்தீர்த்துகொண்டதில்
உனக்கு உள்ளுர
நிரம்ப சந்தோஷம்!



நீயும்
படிக்காத  பெண்மணியாததால்
எனக்கும்
வசதியாக போய்விட்டது!



புத்தகம்  வாங்க பணம் கொடுத்தாய்!
மீன் பிடிக்க
தூண்டில் முள் வாங்கினேன்!
என் எதிர்காலம்
புகையாய்
கரைந்துகொண்டிருக்கும்
பெரிய
ஆபத்தினை
நீ
தெரிந்திருக்க
வாய்ப்பில்லாமல் போனது !


பள்ளிக்கு போவது போல போய்
உடையான் குடிக்காடு
தோப்பேரி கோவிலுக்குள்
ஒளிந்து கொண்டு,
அருகிலுள்ள கிணற்றில் குதித்து விளையாடி,
பசிக்கு கொண்டுவந்த
புளி  சோற்றை  சாப்பிட்டு




பள்ளிக் கூடம்  விடும் நேரத்திற்கு
நல்லபிள்ளையை  போல
வீடு வந்து சேர்வேன் !

இந்த விஷயம் ஓர் நாள்
வெளிச்சத்திற்கு  வந்தபோது,
நீ
திடுக்கிடவில்லை!


மாறாக
அதற்காக
சோறு தண்ணீர் குடிக்காமல்
நீ
பட்டினிக்கிடக்கவில்லை!
உனக்கு
ஒரு நம்பிக்கை,
நம்மிடமிருந்த
ஒரு சில ஆடுகளை
வைத்து எப்படியும்
பிழைத்துகொளளலாம்
என்று
நீயும்
அம்மாயியும்
நினைத்திருக்கலாம்!



நிச்சயமற்ற
இந்த உலகத்தைப்பற்றி
உனக்கும்
எதுவும் தெரியாமல் போனது!


நீ
அப்பாவியாய் இருந்தாய்.
எம்.ஜி.ஆரைப்பற்றியும்
கே.ஆர்.விஜயாவைப்பற்றியும்
பேசிக்கொண்டிருந்தாய்!



இந்த உலகம்
இருப்பவர்களுக்குத்தான்.
இல்லாதவர்களுக்கு
இது
சொந்தமில்லை!
என்பது
உனக்கும்
எனக்கும்
கடைசிவரை  தெரியாமல்
போயிருந்தது !



போதனைகளும்
அறநெறிகளும்
மட்டும்தான்
ஏழைகளுக்கு, 
வாழ்க்கை இல்லை
என்ற
நியாயம்
தெருவில் கிடந்து நாறிக்கொண்டிருந்தது !



 
வாழ்க்கை
நம்மை நிராகரித்தது !
சமூக எதார்த்தம்
நம்மை
சிலுவையில்  அறைந்தது !



நீயும் நானும்
முகவரியில்லா
கடிதங்களாக
திசைகள் மறுக்கப்பட்டோம்!
காலம்
உன்னையும்
என்னையும்
வாழ்க்கையில் போராட வேண்டி
மீண்டும்
பணித்திருக்கிறது !



உன்னிலிருந்து
என்னையும்,
என்னிலிருந்து
உன்னையும்
எப்படி பிரித்து பார்க்க இயலும் ?



வாழ்க்கையில்
மிக அருகருகேதான்
நின்று  கொண்டிருக்கிறேம்!




நன்றி கெட்டவனே என்று
மீண்டும்
தயவு  செய்து 
நெஞ்சிலே கைவைத்து சொல்லாதே!



நான் வாழ்க்கைக்கு
வெளியே நிற்கவில்லை !
வாழ்க்கைக்கு
உள்ளேதான்
உன்னோடு நின்று கொண்டிருக்கிறேன் !

மரங்கள்





காடுகள்
மரங்களின்
வெறும்
வசிப்பிடம் மட்டுமல்ல,


அது
உயிரின சமூகத்தின்
உயர் திணையின்
தொகுப்பாகும் !


காடுகள்
மண்ணின்
உயிர்க்கவசம் !


காடுகள்
மண்ணின் நுரையீரல்கள்!
அது
இயற்கையில்
வெளியாகும் கரிமில  வாயுவை
உட்கொண்டு
உயிர் வாயுவை
உயிரினத்திற்கு
கொடையாக  வழங்குகின்றன !


காடுகள்
காற்றை கழுவுகின்றன!
காற்று
மனிதனை  தழுவுகின்றன !


காடுகள்
மழை தருகின்றன!

மழை
உலக உயிரினங்களுக்கு
உயிர் தருகின்றன!


காடு -
ஆடு
மாடுகளுக்கு
இலை
புல் தருகின்றன !
ஆடு மாடுகள்
வெளியேற்றும்
கழிவுகளால்
காடு
வளம் பெறுகின்றன!


காடுகள்
சுதந்திரத்தை  விரும்பும்
உயிரினங்களுக்கு
அடைக்கலம்  தருகின்றன !


காட்டு
விலங்குககள்
நாட்டை விரும்புவதில்லை!
நாட்டு  விலங்குகள்
அதற்கு  ஆபத்தை  விளைவிக்கின்றன !
அதனால் -
காடு
அதற்கு
பாதுகாப்பாக  இருப்பதால்
காட்டையே  விரும்புகின்றன !


காடைக்கு
கலத்தை போட்டாலும்
அது
காட்டையே  பார்க்கும்
என
பெரியோர்கள்
சொல்லி
வைத்திருகின்றார்கள்!


காடுகள்
ஞானத்தை வளர்க்கின்றன!
உலகம் புகழும்
ஞானிகள்
காட்டில்தான்
தங்கள்  ஞானத்தை 
பெற்றிருக்கின்றார்கள் !


கோயில்கள்
இல்லாத  ஊரில்
குடியிருக்கவேண்டாம்
என்பதற்கு பதிலாக
காடுகள்
இல்லாத ஊரில்
குடியிருக்க வேண்டாம்
என
கூறலாம்!


மனிதன் முதலில்
காட்டில்தான்
பிறந்தான் !
காடு
மனிதனுக்கு
நாகரிகத்தை  கற்றுக்கொடுத்தது !



காடுகள்
நாகரிகத்தின்
தொட்டில்
எனலாம் !



காடுகளை
மனிதன்
தண்ணீர் ஊற்றி
வளர்க்கவில்லை!
அது -
தானாக வளர்ந்தது !
தனக்கான
தேவையை
தானே  நிறைவு 
செய்து கொள்கிறது !


காடு இல்லாத
நாடு
சுட்டு காட்டிற்கு
ஒப்பாகும் !


காடுகள்
வெயிலை தடுக்கின்றன !
வெயிலின் ஒளிகற்றையை
உள்வாங்கி
உயிரை காக்கின்றன !


மக்கள் தொகையின்
வளர்ச்சிக்கேற்ப
மரங்களின்
எண்ணிக்கையை
அதிகப்படுத்தவேண்டும் !



மனிதன்
இரக்கமேயில்லாமல்
மரத்தை வெட்டினான்!
மரம்
அழுதது !


ஒவ்வொரு
மரமும்   மண்ணில்
வீழ்ந்து   மடிந்தபோது
மனிதனின்
ஆயுள் வேர்களின்
காலங்கள்
கணக்கிடப்படுகின்றன !


மரங்களை
வெட்டியதால்
உலகவெப்பம் உயர்ந்தது!


பனிமலைகள்
உருகுகின்றன!


கடல் மட்டம்
உயர்கின்றன !


ஒரு நாள்
நிலம்
கடலாகப்போகின்றன !
கடல்
ஒரு நாள்
நிலமாகபோகின்றன  !


காடுகளை
துவக்கத்தில்
மனிதன் விறகுக்காக அழித்தான்!


பின்னர்
பணம்
சம்பாதிப்பதற்காக
அழித்தான் !


காடுகளை
அழிப்பவனை  தடுக்க
கடுமையான சட்டமில்லை !


ஒவ்வொரு
மரமும்  வெட்டப்படும் போதும்
ஒரு
மரக்கன்று
நடப்படவேண்டும்
என்ற
மன சாட்சி
யாருக்கும் இல்லை !


எனது
தேசத்திலும்
காடுகள்  உண்டு !
ஆனால்
அதில்  மரங்கள்தான் இல்லை !



எம்
முன்னோர்கள்
ஒரு இடத்தில்
வசிப்பதற்கு  முன்னால்
அவ்விடத்தைச்சுற்றிலும்
மரம் நட்டார்கள்!


சாலை இரு மருங்கிலும்
மரம் நட்டார்கள்!
அவ்வழியே 
வருவோர்  போவோர்கள்
அதில்
இளைப்பாறினார்கள்!


அக்காலத்தில்
பிள்ளை பேறு
இல்லாதவர்கள்
பிள்ளையாய் நினைத்து 
மரம் வைத்தார்கள்!

வைத்த மரமெல்லாம்
ஊருக்கு ஊர்
குளக்கரையிலும், 
கண்ட கண்ட
இடங்களிலும்,
இன்றளவும்
அவர்களின்  முகவரிகளை
சொல்லிவருகின்றன !
 
அவர்கள்
நட்ட மரத்தில்தான்
நாம்
இளைப்பாறுகிறோம்!
நாம்
இது வரை
சொந்தமாக
மரம் நடவில்லை !


விறகு வேண்டுமா
மரத்தை வெட்டுகிறோம்!


மனிதனை எரிக்கவா
மரத்தை வெட்டுகிறோம்!


அரசியல் தலைவர் கைதா
மரத்தை வெட்டுகிறோம்!


ஆடுமாடுகளுக்கு
தழை  வேண்டுமா
மரத்தை வெட்டுகிறோம்!


வீடு கட்டவா
மரம்  வெட்டுகிறோம்!

வீடு
பேறா
மரம் வெட்டுகிறோம் !


மரம்
இறந்துபோனால்
விறகாக
மாறுகிறது.

மனிதன்
இறந்துபோனால்
சடலமாக
மாறுகிறான்.

சடலத்தை வைத்துக்கொண்டு
ஒன்றும்
செய்யமுடியாது !


மனிதர்களை
மரம்
என்று சொல்வது
மரத்தை
அவமானப்படுத்துவதற்கு
ஒப்பாகும் !



மூடர்களை
மரமண்டை
என்று திட்டுவது
திட்டுபவர்களின்
அறியாமையை காட்டுவதாகும் !



மனிதனை காட்டிலும்
மரங்கள்தான் 
மாபெரும் செல்வங்கள்
என்பது
மூடர்களுக்கு தெரிவதில்லை!   


மரத்தை நட்டால்
மழை வருகிறது !


மனிதனை
பெற்றால்
கண்ணீர்  தருகிறான் !


மரங்கள்
மண்ணின்
குழந்தைகள் !


மரம்
மண்ணில் விழுந்து
எருவானால்
மீண்டும்
பல தாவரங்கள்
உயிர்க்கிறது !
மனிதன்
இறந்தபின்பு 
அவனின் 
சாம்பலின் மீது
புல்கூட
முளைப்பதில்லை !


மரம் மண்ணுக்கு புதல்வன்.
மரம் மண்ணுக்கு  உயிர்.
மரத்திற்கும்
மண்ணுக்குமே
தொப்புள்கொடி  உறவு.


மனிதனுக்கும்
மண்ணுக்கும்
உள்ள உறவு
வழிப்போக்கர்கள்
உறவாகும் !


மரம்
காய் தருகிறது !


மரம்
கனிதருகிறது !


மரம்
தொட்டில் தருகிறது!


மரம்
கட்டில் தருகிறது !


மரம்
வீடு தருகிறது!


மரம்
கூடு தருகிறது!


மரம்
ஏடு தருகிறது !


மரங்கள்
தங்கள் கிளைகளில்
பறவைகளை கூடு கட்டிக்கொள்ள
அனுமதிக்கின்றன!
அது
ஒரு போதும்
இடைஞ்சல் செய்து 
அவைகளை விரட்டுவதில்லை !


மனிதன்
தன்னிடம்
உள்ளவற்றில்
இல்லாதவர்க்கு வழங்க
இசைய மறுக்கின்றான்!


மனிதன்
ஒருதடவை வெட்டுபட்டாலே
யாருக்கும்
பயனற்று போகிறான்!
ஆனால் 
மரங்களை
எத்தனை முறை
வெட்டினாலும்
கிளைகள் பரப்புகின்றன !

பூக்களை தூவி
பூமியை பரவசப்படுத்துகின்றன!
ஆனால்
மனிதன்
பூமியை
குப்பை  கூளங்களால்
நிரப்புகின்றான் !



வேதியியல் உலகம்
மானுடவாழ்வை
அனைத்து தளங்களிலும்
எரித்து தீய்க்கின்றன!

மரங்கள்
அவற்றை
சலவை செய்து
சுத்தமாக்குகின்றன!




மரங்களை கொண்ட தேசங்கள்
மழைவளம் பெறுகின்றன.
மரங்களற்ற தேசம்
மனிதர்கள்
வாழ்வதற்கு
தகுதியற்ற தேசமாகும் !




மனிதன்
சுவாசிக்க 
நாசிதேவைப்படுகிறது !
மரங்கள் சுவாசிக்க
இலைகள்
தேவைப்படுகிறது !
இருக்கின்ற
ஒரு  சில மரங்களும்
மொட்டையடிக்கப்படுகின்றன.
சுவாசிக்கமுடியாமல்
மரங்கள்
ஆஸ்துமா நோயாளியாய்
அவஸ்தைப்படுகின்றன!




ஒவ்வொரு மரமும்
இரக்கமற்றமுறையில்
கொல்லப்பட்டு
மண்ணில் சாயும் போது
ஒசோன்
அடுக்குகளின்  ஓட்டைகள்
கூடுதலாக
விரிவடைகின்றன !



அரசே
மரங்களை
திட்டமிட்டு  அழிக்கின்றன!
பொதுமக்களுக்கு
பிழைப்பிற்கென
அரசு
இலவச  ஆடுகள் வழங்குகின்றன!



பொதுமக்கள்
ஆடுகளின் உணவுக்காக
மரத்தை
சிர சேதம்
செய்கிறார்கள் !



ஆடு
வளர்கின்ற தேசத்தில்
மரங்கள் மீதானா
கொலை முயற்சியை
தடுக்கமுடியாது !

பூனைகளும்
கோழிக்குஞ்சுகளும்
நண்பர்களாக
இருக்கமுடியாது !

ஆடுகளும்
மரக்கன்றுகளும்
அருகருகே
வசிக்கமுடியாது !



ஆடுகள்
மரங்களின்
எதிரிகள் !


ஆடுகளால்
கிராமங்களின்
மரங்கள்
பசுமை இழந்து
விதவைகளாக
காட்சியளிக்கின்றன!


எதிர்கால
தலைமுறைக்கு 
சேர்த்துவைக்கும்  சொத்து
பணம் காசல்ல,
மாறாக
மரங்கள்தான்
நாம் விட்டு செல்லும்
நிரந்தர சொத்தாகும் !



அடுத்த
தலைமுறைக்கு வரும்
ஆபத்தினை மரங்களால்
மட்டுமே
தடுக்க முடியும் !


மனிதன்
வந்து போன
அடையாளத்தின்  தடங்கள்
பூமியில்
நீண்டநாட்கள்
பேசப்படுவதில்லை !

ஆனால் -
அவன்
நட்டுவைத்துவிட்டு போகும்
மரங்கள்
அவன் மரணத்திற்கு
பின்பும்
அவன் பெயரை
சொல்லி சொல்லி மகிழ்கின்றன !


ஒரு நடோடி

உனக்கு
நான்
எந்த வாக்குறுதியும்
தரவில்லை !


என்னோடு
சேர்ந்து வருவதால்
நீ
எந்த மகிழ்சியும்
அடைய போவதில்லை !


எனினும்
என்னுடன் 
சேர்ந்து வருவதில்
மிகவும்
பிடிவாதமாய் இருக்கிறாய்!



நானே
ஒரு
நடோடி !


எனக்கே
பிழைப்பதற்கு
வழியில்லை
ஒரு
பிச்சைக்காரனாய் 
ஊர் ஊராய் சுற்றிவருகிறேன்!


உன்னை
நிலையாக
உட்கார வைக்க
என்னிடத்தில்
ஒரு இடம்
நிரந்தரமாக கிடையாது!


என் நிலையை
தெரிந்தும்
என்னை நேசிப்பதாக
சொல்கிறாய்!


என்னை
நீ
பின் தொடர்வதால்
நீ
என்ன சுகத்தை
அடையப்போகிறாய்!
மாறாக 
உன்
உறவுகளை
நீ
இழக்க வேண்டியிருக்கும் !

நாங்கள்
வறுமைக்கு
வாழ்க்கைப்பட்டு
மரணத்தோடு 
போராடும்
ஏழ்மையின் குழந்தைகள் ! 


ஒன்றை இழந்துதான்
ஒன்றை
பெறவேண்டுமென்றால்...
எனக்காக 
உன்
வசதியான வாழ்க்கை
சூழலை இழந்து
நீ
துன்பப்படுவாய்!


சுவையாக
சாப்பிட்டு பழக்கப்பட்ட
நீ
என் கரம் பிடித்தால்
ரேஷன் கடையில்
அரிசிக்கும்,
மண்ணெணைக்கும்
கியூவில்
காத்துக்கிடக்கவேண்டியிருக்கும்!


அமைதியாக
உட்கார்ந்து சாப்பிட கூட
உனக்கு
நேரம் கிடைக்காது!
வேலை தேடி
நாயாய்
அலைய வேண்டியிருக்கும்!


குளு குளு
அறையில்
இருந்து பழக்கப்பட்ட
உனக்கு
என்
குடிசை  வீட்டில்
குடியிருக்கும்
கொசுக்களின்
கடியை
நீ
தாங்க மாட்டாய் !


மழைவந்தால்
வீடெல்லாம் குளமாகும்
உட்காரவே
இடம் கிடைக்காமல்
நிம்மதி இழந்து போவாய்!


என் நேசம்
களங்கமற்றது
என்கிறாய்!
உண்மைதான்.
உன் நேசத்திற்கு
வறுமை
என்றால்
என்னவென்று
தெரியாது!


உன் நேசத்திற்கு
விலைவாசி உயர்வைப்பற்றி
ஒன்றும்
தெரியாது !


உன் நேசத்திற்கு
மின் கட்டண
உயர்வைப்பற்றி
ஒன்றும் தெரியாது!


உன் நேசத்திற்கு
பஸ் கட்டண  உயர்வைப்பற்றி
புரியவே புரியாது  !


உன் நேசத்திற்கு
குடிதண்ணீருக்காக
மைல் கணக்கில்
அலையும்
எங்கள் ஜனங்களின்
கவலை தெரியாது !

சொல்கிறாய்...
உன் நேசிப்பு
களங்கமற்றதுதான்!
அது
மழை நீரைப்போல
மிகவும்
தூய்மையானது!


ஆனாலும்
எங்களின் வாழ்க்கை
எங்களுக்கப்பால்
அலங்கோலமாக
யாரும்
கவனிப்பாரற்று
கிடக்கிறது!


உனது
வாழ்க்கையின்
உயரத்திற்கும்
எனது
வாழ்க்கையின்
உயரத்திற்கும்
இடைவெளி
விரிந்து செல்கின்றன !


எதார்த்தமான
காதல் நினைவுகளுக்கப்பால்
என்னை
காதலித்து
ஜீரணிக்கும்
மன நிலையில்
நீ
இருக்கலாம்!


ஆனால்
வாழ்க்கை என்பது
கல்லும்
முள்ளும்
கொடும் காயம் விளைவிக்கும்
பாறைகள்  நிறைந்தது!
அது உன்னை
காயப்படுத்தி
அழவைக்கும் !



நீ
ஓ வென
கத்தி அழுது விடுவாய்!
நான்
பொறுக்கமாட்டாமல்
உன்னை தேற்றுவேன்
அந்த தேறுதல்
எதற்கும் உதவாது!


உன்னை சார்ந்த
உன் வாழ்க்கை சூழல்
உன்னை தொடர்ந்து
இம்சிக்கும்!


உன்னை குறித்த
பலகீனங்களை நினைத்து
உள்ளுக்குள்
உன்னை
திட்டிகொள்வாய்!


முன்னர்
எனக்காகவும்
உனக்காகவும்
சேர்த்து அழுதுவைத்த நீ,
பின்னர்
உனக்காக மட்டும்
தனிமையில்
அழுது
உன்  சுயநலத்தை
காட்டிக்கொண்டிருப்பாய்!


எது
உண்மையென
நினைத்து
இதுவரை
உறுதியுடன் இருந்தாயோ
அது
அனைத்தும்
மெள்ள மெள்ள
உனக்கு
தவறுகளாய் தோன்றும்!

உன்
சொகுசு வாழ்க்கை
உன்னை
தொந்தரவு செய்துகொண்டேயிருக்கும் !

காதல்
என்பது
இதுவரை 
தென்றல்
என
நினைத்துக்கொண்டிருந்த நீ ,
அது தேளாய்
கொட்டியதும்
உன்
துயரத்தை  எண்ணி
துன்பப்படுவாய் !

 
இந்த
உடமை சமூகத்தில்
நான் வழ்க்கைக்கு
தகுதியற்றவன்
என
ஒரு
விபத்தை போல
நீ
எண்ணுவாய்!

எனவே
அதற்கு முன்னால்
உனது காதலை
மீண்டும்
பல முறை
பரிசீலனை செய்!


உனக்காக
என்னிடத்தில் இழப்பதற்கு
என்னை தவிர
ஒன்றுமில்லை
ஆனால்
எனக்காக
நீ
அனைத்தையும்
இழக்க வேண்டியிருக்கும் !


எனது தூரம்
எனது பார்வைக்கு அப்பால்
விரிந்துகிடக்கிறது!
எனது
வழிப்பயணத்தில்
நீ
என்னுடன் பங்கேற்பதில்
எனக்கொன்றும் தடையில்லை!
ஆனால்
நிகழ்கால
சமூகத்தின் மீதான
எனது பார்வையில்
நீ
ஒரு போராளியாய்
என்னுடன் வா


காதல்
என்பது
இரு தனி நபர்கள்
சார்ந்த பிரச்சினையல்ல
அது
ஒரு சமூக விடுதலை
சம்பந்தப்பட்டதாகும்!
 

தோழி !
எதார்த்தமான
காதலுக்கு  வெளியே
ஏற்படும்
இழப்புகள்
அனைத்தும்
ஈடு செய்யகூடியது!
ஆனால்
காதலில் ஏற்படும்
இழப்புகளை
உயிரை கொடுத்தாலும்
அதை
ஈடு செய்ய இயலாதது
என்பதை
ஒருபோதும்
மறக்கவேண்டாம்..



முந்தரிக்காட்டு புரட்சி

1977-தொடங்கி  இன்றுவரை  நான் பிறந்த இடத்தையும், அதை  சுற்றிலும்  நடைபெற்றுவரும் சில அரசியல், சமூக  நிகழ்வுகளை எதார்த்தமான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறேன். சமூக  நிலைக்குறித்து   நான்   வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் நிகழும்   சமூக வாழ் நிலையின்  வெளிப்பாடாகும். எந்த நிற்பந்தத்தத்தின்  அடிப்படையிலும்   அதில் மாற்றத்திற்கு  இடமில்லை.  சமூக பொருலியலின் அடிப்படை நிலைகளில்  ஏற்படும்  மாற்றத்திற்கு ஏற்ப  என் கருத்துக்களில் மாற்றம்  உருவாகலாம் .




இதோ
பொன்னிறவிடியல்
உதயமாகபோகிறது!
கொடிய
இருளினை
எரித்து சாம்பலாக்க
ஆயிரம் சூரியன்கள்!
கிழக்கு வானத்தில்.


வறுமையை
தூக்கிலடப்போகிறோம்
என
சூளுரைத்தார்கள்!
வறுமை
தெருவுக்கு தெரு
அலைந்துகொண்டிருந்தது!


இந்த ஊருக்கு
அவர்களின் வருகை
புதுமையாக இருந்தது!
அவர்கள் ஒன்றும்
தேவ தூதர்கள் அல்ல,
மாறாக
அவர்கள்
நிலவும்
சமூக அமைப்பின்
ஒரு அங்கமாக
அவதரித்தார்கள் !


பசித்தவனின்
வயிரைப்பற்றி
பேசினார்கள்!


கடைகோடியில்
கிடந்தவனைப்பற்றி
கவலைப்பட
தங்கள் இருப்பதாக
பறைசாற்றினார்கள்!


மானுடத்தின்
உயிர் வலியை பற்றி
கவலைப்பட்டு
கண்ணீர் விட்டதோடு
நில்லாமல்
அதை
நீக்குவதற்கான மருந்து
தங்களிடமிருப்பதாக
உறுதியளித்தார்கள்!


ஊர் ஜனங்கள்
எல்லோரும்
அவர்களை
மலைபோல
நம்ப ஆரம்பித்தார்கள் !


நாளுக்கு நாள்
அவர்களுக்கும்
மக்களுக்கும்
இடையில் இருந்த
இடைவெளி
மெள்ள மெள்ள
சுருங்கி கொண்டுவந்தது!


அச்சத்தோடு
தூரத்தில்
நின்றவர்கள்
மெள்ள மெள்ள
நெருங்கி வந்தார்கள்.
இது வரை
அவர்களை  பிடித்திருந்த
சந்தேகப்பேய்
கொஞ்சம் கொஞ்சமாக
விலகியபின்னர்,


எல்லோர் வீட்டிலும்
உரிமையுடைய
உறுப்பினர்களாய
ஏற்று கொள்ளப்பட்டார்கள்!


அவர்களில்
ஒரு
சிலர்
தங்களை
பெயர் சொல்லி
அழைத்துக்கொண்டனர்.
சிலர் தங்களை
தோழர்கள்
என அழைக்கலாம்
என்றனர் !


நாளுக்கு நாள்
மக்கள் நெஞ்சில்
அருகம்புல்லாய்
வேரூன்றி
கொண்டிருந்தார்கள் !


எங்களின்
துயரங்களை சரமாக தொடுத்து
பாட்டாக பாடினார்கள்.
அந்த  பாட்டு சத்தம்
திசைகளை
அதிரசெய்தது !


ஈ .வெ . ராமசாமிக்குப்பின்பு
இவர்களின்
பிரவேசம்
இன்னொரு
சமூக விடுதலையை நோக்கி
இட்டு செல்லும்
என
பேசப்பட்டது !


தீணடாமையை
துடைத்தெறிய
கடுமையாக
பேசப்பட்டு
செயல் திட்டம்
வகுக்கப்பட்டன !


மாட்டுக்கறி
சமைக்கப்பட்டு
பல்வேறு
கிராமங்களை ஒருங்கிணைத்து
சமபந்தி போஜனம்
நடத்தப்பட்டன !


தீண்டாமை
என்ற
குறியீடு
புரட்சியின்
எதிரி
எனப்பேசப்பட்டது!


செருப்பு போட
மறுக்கப்பட்ட
மக்களுக்கு
செருப்பு அணிவிக்கப்பட்டு
உயர் ஜாதிக்காரர்களின்
தெருக்களில்
நடக்கவிடப்பட்டனர்!


நம்பிக்கை
ஒளிக்கீற்றுகள்
நான்கு திசைகளிலும்
நாளுக்கு நாள்
தீவிரமாக
ஒளி வீசின!


நிச்சயமான
உலகு
உதயமாகும்
என
உத்திரவாதமளிக்கப்பட்டன!



சாதி ஏதடா
மதங்கள் ஏதடா
உழைக்கும் ஜனங்கள்
ஒன்றுதானடா
என
உரக்க
குரலெடுத்து
திசைகளை
அதிரசெய்தார்கள் !


காட்டு தீயாய்
இந்த
பாட்டுத் தீ
பல
முந்தரிகாடுகளை கடந்து
சமவெளியைநோக்கி
சென்றுகொண்டிருந்தது !


உழுபவனுக்கே
நிலம்
சொந்தம்
என்று சொன்னவர்கள்,
விரைவில்
அரசு முந்தரி காடுகளை
பிரித்து நிலமற்ற
அனைவருக்கும்
நிலம் கொடுப்போம்
என
சொன்னார்கள்!


அதுவரை
அரசு முந்தரி காடுகளை
பொதுமக்கள்
ஏலம் எடுத்து
பங்கு போட்டுகொள்ளலாம்
என்றனர்!


ஆளாளுக்கு
கை வீங்கும் அளவுக்கு
ஓங்கி
கைகளை தட்டினோம்!


புதிய
சமூக
ஒழுங்கமைவுக்கான
நவீன 
கலாச்சாரத்திற்கான
விதைகள்
தூவப்பட்டன!


ஆளும்
அரசுக்கெதிரான
போராட்டம்
பல கட்டங்களாக
நடத்தப்பட்டன!


ஆளுங்கட்சிக்காரர்கள்
சாதாரண ஜனங்களை
கண்ட கண்ட இடங்களில்
நடு ரோட்டில்
இழுத்து போட்டு
போலிசு ஒத்துழைப்போடு
அடித்து
உதைத்தார்கள்!


காறித்துப்பி
ஜனங்களை அவமானப்படுத்தினார்கள் !
எனினும்
புரட்சிப்பயணம்
தொடர்ந்தது !


இளைஞர்கள்
சிவப்பு சட்டை
போட்டுக்கொண்டு
மனுஷங்கடா
நாங்க
மனுஷங்கடா
அவனை போல
இவனை போல
எண்சாண் உடம்புள்ள
மனுஷங்கடா !
என்ற  பாடலை
மிகவும்
உச்சகட்டகுரலில்
பாடிக்கொண்டிருந்தார்கள்.


இலங்கை
தமிழர்களுக்காக
ஈழப்போராளிகளை
கொண்டு வந்து
கூட்டம் போட்டு .
நிதி திரட்டினார்கள் !


இலங்கை
விவகாரத்தில்
இந்தியாவின்
தலையீட்டை
கண்டித்தார்கள்!


எல்லோரும்
புரட்சி செய்யும்
நேரம்
மிக அருகே
வந்து கொண்டிருப்பாதாகவே
நினைத்து  கொண்டிருந்தார்கள்!


முந்தரி
மரங்கள் காய்க்கும்
இளவேனிர்காலமான
மாசி
பங்குனி
மாதங்கள் தொடங்கின!


எல்லோரும்
சிகப்பு துண்டு
அணிந்துகொண்டு
யுத்தகளத்திற்கு
செல்வதை போல
முந்தரி காட்டுக்கு
கிளம்ப தயாரானார்கள்!


முந்தரி காட்டில்
காட்டுகாரன்களை
அடித்து வீழ்த்திவிட்டு
கொட்டை  பொறுக்குவதில்தான்
புரட்சி
அடங்கியிருக்கிறது
என்று
பரப்பப்பட்டதால்
ஆளாளுக்கு
சிகப்பு
துண்டு போட்டார்கள் !


அங்குதான்
புரட்சிக்கான
உருவாக்கம்
இருப்பதாக
கற்பிக்கப்பட்டது!


வெட்டு வாளை
கொண்டு செல்லுவோம்!
விறகு ஒடிக்கும்
வேலண்ணா
வீரண்ணா"
என-
பாடிகொண்டு
முந்தரி காட்டுக்கு சென்று
கொட்டை பொறுக்கினார்கள் !


அரசு காடுகள்
மக்களுக்கே
என முழக்கமிட்டு
கையில் கிடைத்த
பிஞ்சு
காய்
என
கோணி சாக்கில்
உருவி கொண்டு
காயவைத்து
காசாக்கினார்கள் !


தடுக்க வந்த
காட்டுக்காரர்களை
கடுமையாக
தாக்கி
பல்லை  உடைதார்கள்!


அடிபட்ட
காட்டுக்காரன் வாயிலிருந்து
புரட்சி
ரத்தமாய் ஒழுகியது!



அரசாங்க
எந்திரத்துக்கு
வந்ததே கோபம்.
ஊருக்குள்
பொலீசு குவிக்கப்பட்டன!









போலிசு
சனியன்களின்
பலம் தெரியாமல்
புரட்சி
செய்யப்புறப்பட்டவர்கள்
பின்பு
போலிசின்
அட்டகாசத்திற்கு
பயந்து 
ஊரை விட்டு
தலைமறைவானர்கள் !


ஆளே இல்லாத
வீட்டுக்குள்
போலீசு புகுந்து
வீட்டிலிருந்த
பண்டப்பாத்திரங்களை
அடித்து நொறுக்கியது


அடுக்குப்பானைகள்
வீதியில்
வீசப்பட்டன.
கம்பு சோளம்
என
சோற்றுக்கு
வைத்திருந்த தானியங்கள்
அனைத்தும்
சூரையாடப்பட்டன  !


வீடுகள்
கபளீகரம் செய்யப்பட்டன.
வீட்டிலிருந்த
பிள்ளைக்குட்டிகள்
போலீசுக்கு
பயந்து
முந்தரிக்காட்டுக்கும்
தூரத்து ஊர்களுக்கும்
ஓடிப்போனார்கள்!



இதை
கொஞ்சமும் எதிர்பார்க்காத
சாதாரண
ஜனங்கள்
பலரும்
உறைந்துபோனார்கள்!


மாட்டிகொண்டவர்கள்
மீது வழக்குகள்
பதியப்பட்டன.
ஓடிப்போனவர்களை
பொலீசுடன் சேர்ந்து
ஆளுங்கட்சியை
சேர்ந்தவர்களும்
துரத்தி துரத்தி தாக்கினார்கள்!


நீதிமன்றம் போனார்கள்
வழக்கு நடந்தது.
வழக்கு நடத்த முடியாமல்
பலரும்
வீட்டிலிருந்த
பண்டபாத்திரங்களை
விற்று
கேசு பார்த்தார்கள்!


வழக்கின் முடிவு
சாதாரண ஜனங்களுக்கு
சாதகமாக இருந்தாலும்,
ஒரு -
கருவாய் ...
கனவாய் ...
எங்கள் நெஞ்சிலும்
இமைகளிலும்
நாங்கள்
கண் வளர்த்த
எமது
ஜனங்களின்
புரட்சிகர கனவுகள்
என்னவோ
கண்ணீரிலும்
துயரத்திலும்
மூழ்கடிக்கப்பட்டன !


முன்பு
சிகப்பு சாயம் பூசிக்கொண்டு
தலைவர்களாக
வலம் வந்தவர்கள்
பலரும்
புரட்சியை தூக்கி
பரணில் போட்டுவிட்டு
சாதி சங்கத்திலும்
சுரண்டல் கட்சியிலும்
சேர்ந்து கொண்டு
தங்களை
படு கச்சிதமாக
பாதுகாத்துகொண்டார்கள்!


தங்களை
நம்பி
கோஷம் போட்டு வந்தவர்களை
நட்டாற்றில் விட்டு விட்டு
நம்பிக்கை துரோகம்
செய்தார்கள்!


அத்தோடு
இந்த ஊரிலிருந்து
அந்த சிந்தனைகள்
அனைத்தும்
விளக்குமாறு போட்டு
ஒட்ட
துடைத்தெறியப்பட்டு
தூர வீசப்பட்டன!


அதன் பின்பு
அதை பேசவே
பலரும்
மறந்து போனார்கள்!
நிறைய பேர்
அந்த
கொள்கைகளை
பேசுபவர்களுக்கு
அதிராக  செயல்பட்டார்கள்!


தங்களுக்கு
பின்னால்
யாரும் வளரக்கூடாது
என
கங்கணம்  கட்டிகொண்டு
கருங்காலி
வேலைபார்த்தார்கள் !


முற்போக்கு கொள்கைகளுக்கு
முக்காடு
போடப்பட்டது!


அத்தோடு
அந்த யுகத்திற்கான
குழிதோண்டி புதைக்கும் படலம்
முடிந்து
முப்பது ஆண்டுகள்
போய்விட்டன!


இந்த
ஊரில்
இப்போது
இந்த கருத்தியலின் நாற்றம்
கிஞ்சித்தும்
இல்லாமல் போயிற்று !




உலகம்
வர்க்கங்களாக
பிளவுண்டு கிடக்கிறது!
ஆனால்


இந்த ஊர்
வகையறாக்களாக
பிளவுண்டு கிடக்கிறது!
வர்க்கப்பகமையைக்காட்டிலும்
இந்த
ஊரின் வகையறா பகைமை
கொடுமையாக இருக்கிறது!


எவ்வளவு படித்தவனாக
இருந்தபோதிலும்
வகையறா
என்ற
கிணற்றுக்குள்
வீழ்ந்து
தன்னை மூழ்கடித்துகொள்கிறான்!


ஒரு மனிதனுக்குறிய
அடிப்படை
அடையாளங்களை
முன்னிறுத்துவதைக்காட்டிலும்
தனது
வகையறாவை
முன்னிறுத்தி
கேவலப்படுத்துகிறார்கள்!


வெறும்
ஊர் பெயர்மட்டும்
பழைய பெருங்காய
டப்பா வாசமடிப்பதை போல
இருக்கிறது!


உலக மயத்தின் விளைவாக
எப்படி
பணம் சம்பாதிப்பது?
எதை விற்றாவது
சொகுசு வாழ்க்கை வாழ்வது?
என்ற
சிந்தனை தளத்தில்
ஊர் வீழ்ந்து கிடக்கிறது !


ராமன் ஆண்டால்
நமக்கென்ன!
ராவணன் ஆண்டால்
நமக்கென்ன
என
அவரவர்கள்
அவர்களின் வேலையை
செய்து கொண்டிருக்கிறார்கள்!


நடுத்தெருவில்
யார் வெட்டிக்கொண்டு செத்தாலும்
கவலைப்படுவதற்கென்று
யாரும் இல்லை!


முற்போக்கு
கொள்கைகளுக்கும்
இந்த ஊருக்கும்
ஒரு
தலைமுறை இடைவெளி
ஏற்பட்டிருக்கின்றன!




பகுத்தறிவு
சிந்தனை தந்த  பூரிப்பில்
தந்தைபெரியாருக்கு
எடைக்கு எடை
முந்தரிப்பருப்பு
கொடுத்த 
அவரின் 
கருத்தியல்  வாரிசுகள்,
அவரின்
மறைவுக்கு  பின்பு
அவரின்
சிந்தனைகளை
மேன் மேலும்
மெருகேற்ற
கோயில் கட்டி
கும்பாபிஷேகம்
நடத்திகொண்டிருக்கிறார்கள் ! 



அவ்வபோது
அம்மனுக்கு 
பிடித்தமான
கூழ் காய்ச்சி ஊற்றப்படுகிறது !
கூடவே
பெரியாரின்
நாமமும்  ஓதப்படுகிறது !


கம்யூனிஸ்டு
தலைவர்களின்
நாமம் 
பிழைப்புவாதத்தில்
சிக்கித்திணறி 
நாறிக்கொண்டிருக்கிறது !


வாழ்க்கை
சினிமா தனங்களாலும்
நுகர்வு கலாச்சாரத்தாலும்
சூழப்பட்டிருக்கிறது!


ஒவ்வொருவரும்
சிங்கப்பூர்  போய்
நிறைய சம்பாதிக்கலாமா
துபாய் போனால்
நிறைய சம்பாதிக்கலாமா
என்ற
கணக்குகளுக்குள்
வாழ்க்கையின்
எல்லைகளை
சுருங்கி கொண்டனர்!


நகரமயமாக்கலின்
விளைவாக
ஊரிலிருந்த
சந்து பொந்துகளில் கூட
வீடுகள்
முளைத்துவிட்டன!


மூத்திரம்
விட கூட
இடம் கிடையாது !


மனிதர்களுக்கிடயே
உள்ள உறவுகள்
அனைத்தும்
வணிக உறவுகளாகிவிட்டன!


தனி நபர் மதிப்பீடுகள்
முன்பைக்காட்டிலும்
தனது
பொருளாதார அளவு கோலை
மிக
உயரத்தில்
தூக்கிப்பிடிக்கின்றன !


நேருக்கு நேர்
சந்திக்கும் போது
வெறும்
சம்பிரதாயத்துக்கு
வணக்கம்
சொல்வதைக்கூட
பலர்
தேவையற்றதாக நினைக்கின்றனர்!


வாழ்க்கை என்பது
வெறும்
வரவு
செலவு
கணக்காக போய்விட்டன!


கடைசிகாலத்தில்
கிராமத்திற்கு போனால்
சாதி சனத்தோடு
தனது
இறுதி நாட்களை
கழிக்கலாம்
என்று
நகரத்திற்கு
பிழைக்கபோன
பலரின்
ஆசைகள்
மெள்ள மெள்ள
பொய்த்து வருகின்றன!


அதற்கு
இந்த
ஊரும் விதிவிலக்கல்ல...


சமூக அவலத்தைப்பற்றி
வாய்கிழிய பேசுவார்கள்!
அதை
அகற்றுவதற்கு
யாரும்
முன்
வரமாட்டார்கள் !


பலர் நடக்கும்
பாதைமீது
முள்ளை கொண்டு வந்து
கொட்டுவார்கள்!
யாராவது
அதை
அகற்ற முன்வந்தால்
இரக்கமேயில்லாமல்
கொச்சைப்படுத்துவார்கள்!


இப்போது
தோன்றியுள்ள
புதிய தலைமுறைக்கும்
முற்போக்கு கொள்கைகளுக்கும்
மிகப்பெரிய
இடைவெளி
தெரிகின்றன !


தற்சார்பு
அறிவு என்பது
சாராம்சத்தில்
சுயநல அறிவாகும்!
அது
இவ்வூரில்
பெரிய
சாதனையாகப்பேசப்படுகிறது !


ஒருவன்
அடுத்தவனைப்பற்றி
கொஞ்சம்கூட
நினைப்பதைக்காட்டிலும்
தன்னைப்பற்றித்தான்
அதிகம்
சிந்திக்கிறான்!



ஒரு
ஆமையைபோல
ஒவ்வொருவரும்
குறுகிய
வட்டத்துக்குள்
தங்களை முடக்கி
கொண்டுவருகின்றனர் !


நகரமயமாக்கலின்
விளைவாக
அண்டைவீட்டுகாரர்களெல்லாம் 
அந்நியர்களாகிவிட்டனர் !


தாமரை இலையில்
ஒட்ட மறுக்கும்
தண்ணீரைப்போல...
மனித உறவுகள்
ஒன்றோடொன்று
ஒட்ட மறுத்து
திசைக்கொன்றாக
சுற்றித் திரிகின்றன!


தகவல் தொழில் நுட்பங்களால்
கிராமத்தின்
உயிர் நாளங்கள்
கடுமையாக
சீழ் பிடித்திருக்கின்றன !


பல
கோட்பாடுகளின்
ஆய்வுகளமாக
இருந்த
இவ்வூர்
தற்போது
எந்த தனித்துவமும்
இல்லாமல்
வெறும்
முகவரியை சுமந்து
வாழ்ந்து வருகிறது!


ஒரு
ஊரின்
அடையாளம் என்பது
நான்கு
பணக்காரர்கள்
அந்த ஊரில்
வாழ்வதல்ல..


நான்கு
நபர்கள் மட்டும்
கார்கள்  வைத்திருப்பதல்ல,


ஊரெல்லாம்
கான்கிரீட்
வீடுகளாக
காட்சியளிப்பது மட்டுமல்ல,


ஊரிலுள்ள
கோயில் -
குளங்கள் -
பள்ளிக்கூடங்களை
சுட்டிக்காட்டி
இது தான்
ஒரு
ஊரின் அடையாளம்
எனக்கூறிகொண்டு
தங்களை
தாங்களே
ஏமாற்றிக்கொள்ள முடியாது !


ஏனெனில்
இது
எல்லா ஊர்களிலும்
காணப்படுகின்ற
பொதுவான
காட்சியாகும்!


ஆனால் -
அடையாளம்
என்பது
வெறும்
புறத்தோற்றத்தை
கொண்ட
மதிப்பீடுகளல்ல...
அது
ஒரு சமூகத்தின்
பண்பாட்டு தளங்களின்
அகமதிப்பீடுகளை
கொண்டதாகும் !


அடையாளம்
என்பது
ஒன்றோடொன்று
ஒன்றி போவதல்ல...
மாறாக -
ஒன்றிலிருந்து
ஒன்றை
வேறுபடுத்தி காட்டுவதாகும்.


அடையாளம்
என்பது
பிரிதொன்றின்
ஆளுமைக்குள்
அடங்கிபொவதில்லை !
மாறாக
தனது
பலம் பொருந்திய
ஆளுமைதனத்தால்
காணுகின்ற
அனைத்தையும்
வெற்றிக்கொள்வதாகும் !


எங்கும் போலவே
யார் யாருக்கு
என்ன நிறம்...
யார் யாருக்கு
என்ன அடையாளம்
என்பதை பற்றியெல்லாம்
நினைத்துபார்க்க
நேரமில்லை !


இங்கு
குடிப்பதற்கு
தண்ணீர் கிடைக்காமலும்,
பிழப்பதற்கு
வழியில்லாமலும்
பாலைவனத்தில்
பயணிப்பது போலிருக்கிறது !


கிராமத்திற்குறிய
அமைதி
செத்துபோய்
ஆண்டுகள்
பல ஆகிவிட்டன!


கிராமம்  மறைந்து
சிறு
நகரமாக
உருவாகிகொண்டிருக்கின்றன!


அந்த காலத்தில்
ஊருக்குள்
ஒரு
கார் வந்தால்
ஊரே திரண்டு வந்து
வேடிக்கை பார்த்தது !


கிராம சாலை
நெடுஞ்சாலையாக
மாறிவிட்டன !
இன்று
கண்  இமைப்பதற்குள்
எண்ணற்ற
வாகனங்கள்
செல்கின்றன !


வாகனங்கள்
விட்டுசெல்லும்
புகை
புழுதி மண்டலம்
குழந்தை
குட்டிகளின்
நாசியை  நிரப்பி
மூச்சு திணறலை
உண்டாக்குகின்றன !



தனித்தனியாக
இருந்த
இரண்டு
ஊர்களுக்கு
இடையில்
வீடுகள் முளைத்து
ஒரே ஊராகி விட்டன!


ஊரே பயந்து கொண்டிருந்த
சுடுகாட்டை சுற்றிலும்
வீடுகள்
தோன்றி விட்டன !


அறிவியல் வளர
அறியாமை அகன்றது !
அதனால்
இளைஞர்கள்
நிறைய பேர்
சுடுகாட்டை
சீட்டு கிளப்பாக
மாற்றிவிட்டனர்!


சின்ன
ஏரியை சுற்றிலும்
ஏராளமான
காலியான
மது பாட்டில்கள்
காணப்படுக்கின்றன !
ஏரிக்கரையை
மது
அருந்தும்
பார்களாக
இளைஞர்கள்
மாற்றியிருக்கினறனர்!


அமைதிக்கு
ஓய்வெடுத்துகொண்டிருந்த
ஏரிக்கரைகள்
பொதுக்கழிப்பிடமாகிவிட்டன!


உலகப்புரட்சியைப்பற்றி
உரக்க குரலெடுத்த
ஊரின் நடுவே
மதுக்கடை
திறக்கப்பட்டு
ஊர் ஜனங்களுக்கு
தங்குதடையின்றி
மது பாட்டில்கள்
கிடைக்கின்றன!


கூடவே
மதுவை  சிறப்பிக்க
சுவையூறும்
வறுத்த
பன்றிக்கறி பொட்டலங்கள்  !

பணத்திற்கு
கவலையில்லை
கந்து வட்டிக்கு
தாராளமாக
பணம்
கிடைக்கிறது !


குடிமன்னர்களின்
அவசரதேவைக்கு
அடகு கடைகள்
நிறைய உள்ளன!
வீட்டில்
பெண்டாட்டி
பிள்ளைகளின்
காதில்
கழுத்தில் கிடப்பதை
துங்கும் போது
பிடுங்கி கொண்டு வந்து
ஈடு வைத்து
குடிப்பதற்கு
பணம் தேற்றலாம் ! 


வருடத்திற்கு
இரண்டு இளைஞர்கள்
மதுவால்
குடல் வெந்து
இளம் வயதில்
இறந்து கொண்டிருக்கின்றனர் !


எப்படியும் -
எதை விற்றாவது
தினந்தோறும்
குடித்தே  ஆகவேண்டும்
என்ற
நிலையில்
ஒரு பிரிவினர்
உள்ளனர் !

இருக்கின்ற
இரண்டாம்  தலைமுறையினர்
இந்த ஊரை விட்டு
செந்துறைக்கோ -
செயங்கொண்டத்திற்கோ -
இடம்
பெயர்ந்து கொண்டிருக்கின்றனர் !


ஆபத்துகளற்ற
ஒரு
சமூக  அமைப்பாக
உருவாக்கம்  பெற்றுள்ள
இவ்வூர்
தற்போது
எந்த
கோட்பாட்டு
வளையத்துக்குள்ளும்
மாட்டிகொள்ளாமல்,
எந்த
சலனமும்
இல்லாமல்
தனது
இயல்பான போக்கில்
சென்றுகொண்டிருக்கிறது !


ஆனாலும் 
ஒரு
யுகம் மடிந்துபோனது குறித்து
எந்த
பிரங்சையுமில்லாமல்
நிகழ்காலம்
தனது 
புதிய
அடையாளங்களை தேடி
வாயிலில் 
மாவிலைத்தோரணங்களுடன்
கைகளில்
மாலைகளோடு 
காத்திருக்கிறது !