Sunday, 9 June 2019

காவேரி வந்தாள் (12)


Related image
சின்னப்பிள்ளையின் மனதில் தோன்றிய அந்த நினைப்பு அவளுக்கு பெரிதென்று பட்டது.ஆனால் அதை யாரிடமும் அவள் சொல்லவில்லை. தொடர்ந்து  மாடு அசைபோடுவதைப்போல, தனக்குள் அதை நினைத்துகொண்டு, விடாமல் பற்றிக்கொண்டு நாளின் அன்றாட பொழுதெல்லாம் தனது அண்ணன் மகளையே  நினைத்து வந்தாள். இந்த துயரம் நடந்திராவிட்டால்  இவளின் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்பதை நினைத்தாலே அவளுக்குள் மகிழ்ச்சியும் துன்பமும் மாறி மாறி வந்து போயின.கண்ணில் நீர் பெருக்கெடுத்து ஓடின.சேலை முந்தானையால் கண்ணீரை துடைத்துக்கொண்டு வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் ஏன பானத்தை கழுவிக்கொண்டிருந்தாள். வீட்டின் திண்ணையில் பார்வதியும் கங்கையும் புளிச்சகீரையை  ஆய்ந்து கொண்டிருந்தார்கள். அடுப்பில் சோறு வெந்துகொண்டிருந்தது.

பொழுது சாய்ந்து கொண்டிருந்தது.மரம் வெட்ட போன  மூத்த மகன்  கலியபெருமாள்  வந்து விடுவான். மகன் பசியில் வருவான் என்ற ஒருவித பர பரப்பு அவளை சூழ்ந்திருந்தது.அதனால் சீக்கிரம் சோறாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் லயித்தவாறு “ கெங்கை அந்த காசலக்கங்கீரையை எடுத்து வா . அடுப்பில் வேக வைத்து கடைய வேண்டும் !” என்றாள். கொஞ்சம்கூட தாமதிக்காமல் காவேரி  புளிச்சை கீரையை அத்தையிடம் கொடுத்தாள் .அதை வாங்கிய சின்னப்பிள்ளை  காவேரியை  உற்றுப்பார்த்தாள். என்ன அத்தை உற்றுப்பாக்கிறே!” என்றாள் காவேரி . “இல்ல ஒண்ணுமில்ல,சும்மா பார்த்தேன் என்றாள். இல்ல எதா இருந்தாலும் சொல்லு அத்தே,என் மனசு கஷ்ட படுது என்றாள் கெங்கை. எனினும் சின்னப்பிள்ளையால் எதையும் முழுதாக சொல்ல முடியாமல் கண் கலங்கினாள். தனது நிலைமையை  நினைத்துதான் அத்தை அழுகிறாள் என்பதை மட்டும்   கெங்கை கொஞ்சம் கொஞ்சமாக  புரிந்து கொண்டாள்.

    அடுக்களையில்  உணர்வுக்கடலில் இரு உள்ளங்கள் தத்தளித்துக்கொண்டிருந்தன.தனது அண்ணன் மகளின் அலங்கோலமான வாழ்க்கையை எண்ணி சின்னப்பிள்ளை கலங்காத நாளில்லை.இனி அவள் என்ன செய்யப்போகிறாள் என்பது பெருத்த கேள்விக் குறியாகிக் கொண்டிருந்தது. அண்ணன் வீட்டு குடும்பம் இப்படி நிர்கதியாய் நிற்பது சின்னப்பிள்ளையை நிலைக்குலைய செய்துவிட்டன.
“அத்தை அத்தை “ கொஞ்சம் திண்ணைக்கு போ !”நான் சோறு ஆக்கித்தறேன் “ என காவேரி  சொல்லவே,சின்னப்பிள்ளை அங்கிருந்து நகர்ந்தாள்.   
திண்ணையின் மேற்கு புறத்தில் தெருவை  பாரத்தவாறு  பார்வதி அமர்ந்துகொண்டு  தெருவில் எப்போதாவது  ஒருவர் அவ்வழியே கடந்துபோவதை பார்த்தவாறு இருந்தாள். அவளுடைய மனமும் மகளைப் பற்றியே சதா நினைத்துக்கொண்டிருந்தாலும்,தனது கணவன் ஆறுமுகம் தான் உடன் இல்லாதபோது  ஆடு மாடுகளை வைத்துக்கொண்டு,தானே சோறுதண்ணி ஆக்கிக்கொண்டு எவ்வளவு கஷ்டபடுவான் என்பதை நினைத்தாலே நெஞ்சமெல்லாம்  நிலைகுலைய தொடங்கினாள். வந்தோமா !போனோமா ! என சீக்கிரம் கிளம்பி போகவேண்டும்  என மனதுக்குள் முடிவு செய்தவளாக இருக்கையில் 'பார்வதி பார்வதி' என அருகில் வந்து அமர்ந்தாள் சின்னப்பிள்ளை.
என்ன பார்வதி ? அண்ணன் எப்படி இருக்காரு ? என்றாள்.
ஏதோ நல்லா இருக்காரு ! என்றாள் பார்வதி. அவளுடைய பதிலில் எந்த சுரத்துமில்லாமால் வேண்டா விருப்பாய் சொல்வதுபோல் இருந்தது. வெறும் சோகம் மட்டுமே அந்த வார்த்தைகளில் நிரம்பி வழிந்தன.பார்வதியின் உதடுகள் வேதனையின் உச்சத்தில் மெல்லத்துடிக்க த்தொடங்கின.கண்ணீர் ஆற்று வெள்ளமாய் உடலை நனைந்து ஓடியது. அவளை அவளாலேயே  தேற்ற முடியாமல் விம்மத்தொடங்கினாள். சின்னப்பிள்ளை அரவணைப்பாக அவளை மெல்ல வருடி விட்டவாறு ‘கவலைப்படாதே ! நாங்களெல்லாம் இருக்கிறோம்ல,நீ எதுக்கு கலங்கிற, எல்லாம் அந்த ஆண்டவன் விட்ட வழி, எல்லாம் விதிப்படித்தான் நடக்கும்.கடைசியில நல்லபடியா முடியும்” என பார்வதியை சின்னப்பிள்ளை தேற்றினாள்.

வானம் மெல்ல இருட்டத்தொடங்கியது    சின்னப்பிள்ளை  சிமினி விளக்கில் சீமெண்ணையை  ஊற்றி விளக்கை பற்றவைத்து மாடத்தில் வைத்தாள்.கொல்லைக்காட்டுக்கு சென்ற சனங்கள் ஒவ்வொருவராக வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். பெரிய மகன் கலியபெருமாள் கூலிக்கு  மரம்வெட்ட சென்றிருந்தான். மரம் வெட்டி,அதன் பின்பு வெட்டிய மரங்களை எல்லாம் மாட்டு வண்டியில் ஏற்றி கொல்லைகாட்டை விட்டு, ரோடு வரும்வரைக்கும் மாட்டு வண்டியை பின்னாலே சத்தம் போட்டுக்கொண்டு தள்ளிக்கொண்டே வரவேண்டும். மாட்டு வண்டி ரோட்டிலே  ஏறிய பின்னர் அது அவ்வளவு சுலபமாக நகர்ந்து விடாது. கரடுமுரடான  ஒழுங்கைதான் அது, .அதில் மாட்டு வண்டி ஆடி,ஆடி மாட்டுவண்டியிலுள்ள  பசைக்கட்டு முழுதும் காய்ந்து ‘கீச் கீச்‘ என சத்தமிட்டவாறு செல்லும். ஒரு  மைல் தூரத்திற்கப்பால்  வந்தாலும்,அது பசைக்கட்டு இல்லாத அச்சு  தேய்ந்த    வண்டிதான் என்பது எளிதில் தெரிந்து விடும். இதற்காகவே மரம் ஏற்றப்போவதற்கு முன்பாகவே கட்டை வண்டியின் சக்கரத்தை கழட்டி அதற்கு பசைதுணியை வண்டி அச்சில் சுற்றி விளக்கெண்ணையை அதில் ஊற்றி அதை விரலால் நன்கு நிரவி  அதன்பின்பு சக்கரத்தை அச்சில்  பொருத்தி கடையாணியை சொருகி  மாட்டை வண்டியில் பூட்டி  வண்டியை ஓட்டிச்சென்றால் வண்டியிலிருந்து சத்தம் வராது. ஆனால் வண்டியிலுள்ள பசைக்கட்டு மொத்தமாக தேய்ந்து தீர்ந்து விட்டால்,வண்டி ஓடுவதற்கு எளிதாக இருக்காது. வண்டியை  இழுப்பதற்கு மாட்டுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.அதனாலே எல்லா மாட்டு வண்டிலும் அதன் அடிப்பகுதியில் முதலுதவிப்பெட்டியைப்போல ஒரு பசைத்துணி,மற்றும் விளக்கெண்ணைய் அடங்கிய ஒரு சிறு பெட்டி வண்டியின்  தொங்கும். கூடவே  ஒரு லாந்தர்  விளக்கும் கண்டிப்பாக  வண்டி பாரில் தொங்கும்  இதெல்லாம் ஒரு மாட்டு வண்டிக்குரிய அடிப்படை தேவையைப்பற்றிய அறிவாகும்.இல்லாவிட்டால் வண்டிமாட்டு சத்தத்திற்கு செல்பவர்களின் வாழ்க்கை  மகவும் சிரமத்திற்கு உள்ளாகிவிடும்.
  
கலியபெருமாள்  தள்ளிக்கொண்டு வந்த வண்டி ஒற்றையடிப்பாதையின் மண் குவியலைக்கடந்து எப்படியோ சற்று சுமாரான பாதையை வந்து சேர்ந்து விட்டது. அதற்குள் வெட்டுக்கு வந்த ஆட்களுக்கும் வேர்த்துவிட்டது. மெல் மூச்சு வாங்கத் தொடங்கின.
 மாட்டுவண்டி பாட்டையை அடைந்தவுடன்  வண்டிக்காரன் வண்டியை லேசாக விரட்டி ஓட்டத்தொடன்கினான். வண்டி சற்று வேகமாக ஓடத்தொடங்கியது. கூலிக்கார ஆட்கள் வண்டியின் பின்னே நடக்கத்தொடங்கினார்கள். வண்டி ஊரைக்கடந்துதான்  செந்துறைக்கு போக வேண்டும். வண்டிக்குத்துனையாக வண்டிக்கு பின்னால் ஒருத்தர் போனால் போதும்,அது மர யாவாரிக்கு சொந்தகாரங்க யாரவது போவாங்க. இனி நாம பின்னால நடக்கவேண்டியதில்லை!” என நினைத்தவாறு வண்டியின் பின்னால் வந்தவன் சத்தவண்டி ஊரின் மையப்பகுதி வழியே அது கடந்து சென்று கொண்டிருக்கையில்,திடீரென சிறு  மூத்திர சந்திற்குள்  புகுந்து   மேற்கால தெருவுக்கு சென்று தனது வீட்டுக்குள் நுழைந்தான் கலிய பெருமாள்.

 
வீட்டின் மேற்கில் சுவரை ஒட்டி வடக்கு தெற்காக இருந்த  நீளமான திண்ணையில் மேற்கு பார்த்து பார்வதி உட்கார்ந்திருந்தாள். அவள் மனது எதையோ நினைத்தபடி அவளின் உடல் இங்கிருந்தாலும்,அவளின் மனது முற்றாக அவளது ஊரில்தான் இருந்தன. ஒண்டியாக் கிடந்து ஆட்டு மாட்டோட  என்ன அவஸ்தைபடபோகிறாரோ என்பதை நினைத்தால் அவளுக்கு மகள் படும் துன்பத்தைக்காட்டிலும் கணவர் ஆறுமுகம் படும் கஷ்டங்கள் அவளை மென்மேலும் வருந்த செய்தன.எப்படியும் சீக்கிரம் வீட்டுக்கு போகவேண்டும் என்ற எண்ணத்தில் லயித்தவளாய் இருந்தபோது ‘அத்தை’ என்ற குரல் கேட்டு சுய நினைவுக்கு திரும்பினாள்.
“எப்ப அத்த வந்தே ?”
“காலையில்தான் வந்தேன் தம்பி !”
ஒரு சிறு புன்னகையுடன் வீட்டின் உள்ளே சென்றவன்.அங்கு தன் அம்மாவோடு காவேரி  உட்கார்ந்திருப்பதை பார்த்து சற்று அதிர்ச்ச்சியுற்றான். “என்ன காவேரி ,நீயுமா அம்மா கூட வந்த ?” எப்ப ஊரிலிருந்து கிளம்பினீங்க? எப்ப வந்து சேர்த்தீங்க?’ என்றான் கலியபெருமாள்.
விடியற்காலமே கிளம்பி நடந்து பத்து மணிக்குள்ள ஊருக்கு வந்து சேர்ந்தோம். இங்கு ஓரத்தரும் இல்லாததால் அத்தைய தேடிக்கிட்டு,துண்டுக்காட்டு கொல்லைக்கு போனோம்,அங்க அத்தை களை வெட்டிக்கிட்டு இருந்துச்சு,அப்பறம் எங்களை அழைச்சுகிட்டு ஊட்டு வந்து சோறு  உனக்காக சோறு ஆக்கிகிட்டு இருக்கோம்” என்று தொடர்ச்சியாக சொல்லி முடித்தாள் காவேரி . அதை சொல்லும் பாங்கிலே அவளுடைய  முகமெல்லாம் தழுவியபடி  சோகக்கீற்றுகள்  இழையோடின. எனினும் கலியபெருமாளிடம் மிகவும் மலர்ச்சியோடு பேசினாள்.

கலியபெருமாளுக்கு காவேரிக்கு  நடந்தது எல்லாம் தெரியும் என்றபோதிலும் எதையும் தெரிந்தது போல காட்டிக்கொள்ள விரும்பாதவனாய் இருந்தான். தம்பி பெருமாளு சுடு தண்ணி போட்டு வச்சிருக்கேன்,போயி குளிச்சுட்டு வா !” என்றாள் சின்னப்பிள்ளை. கலியபெருமாள்  துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு  தோட்டத்துக்கு  குளிக்க சென்றான்.  கொல்லைக்கு போன கலியபெருமாளின்  தந்தையார்  கருப்பையனும் இருட்டோடு வீட்டுக்கு வந்தார். வந்தவர் நேரடியாக பார்வதியிடம் சென்று நலம் விசாரித்துவிட்டு ஏரிக்கு குளிக்கப்போய்விட்டார் .

வாசலில் பாயை விரித்துப்போட்டாள் பாரவதி. அதில் கலியபெருமாள் அமர்ந்தான்.பார்வதி  சுதேசி வட்டியில் கம்மஞ்சோறு ரெண்டு ஆப்பையை மொண்டு போட்டு புளிச்சக்கீரையை வட்டியின் ஓரத்தில் ஒரு கரண்டி மொண்டு போட்டாள்.போதும் அம்மா!” என்றான். நிலா வெளிச்சத்தில் ஒருத்தர் முகத்தை ஒருவர் தெளிவாக முடிந்தது.

“நீங்களும் சாப்பிடுங்க!” என்றான் கலியபெருமாள். எல்லோருக்கும் தட்டில் சோறு போட்டு கொண்டுவந்து வைத்தாள் சின்னப்பிள்ளை. பாயை சுற்றிலும் வட்டவடிவில்  எல்லோரும் அமர்ந்து கொண்டு சாப்பிட தொடங்கினார்கள்.ஏதும்பேசாமல் மவுனமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார்களே தவிர ,உப்பிருக்கா, காரமிருக்கா என்றுகூட ஒருவரும் சொல்லவில்லை. சின்னப்பிள்ளை ஒவ்வொருவராக  சோறு வேண்டுமா ,குழம்பு வேண்டுமா ?” என கேட்டு கேட்டு பறிமாறிக்கொண்டிருந்தாள். அப்போது  குளிக்கப்போன  கருப்பன் வீட்டுக்கு வந்தார். வந்தவர்  ஈர துண்டை மூங்கில் படலில் காயப்போட்டுவிட்டு திண்ணையில்  போய் உட்கார்ந்தார்.  சின்னப்பிள்ளை வட்டியில் சோறுபோட்டு கொண்டுபோய் தனது கணவன் முன்பு வைத்துவிட்டு வந்தாள் .அதற்குள் மகன் சாப்பிட்டுவிட்டு வைத்துவிட்டுபோன சாப்பாட்டு பாத்திரத்தை கழுவி கழனிபானையில் ஊற்றினாள். பார்வதியும்,கங்கையும் ஏற்கனவே வாசலில் உட்கார்ந்திருந்தனர். கலியபெருமாள்  பாயினில் உட்கார்ந்திருந்தான். பார்வதியும் ,கங்கையும் ஏதும் பேசாமல் மவுனம் காத்தார்கள். .

    சாப்பிட்டு விட்டு கை கழுவ தோட்டத்திற்கு சென்ற கருப்பன் கைகழுவியபின்னர் நேராக சென்று திண்ணையில் அமர்ந்து வெற்றிலைப்பொட்டலத்தை அவிழ்த்து அதிலிருந்த கொட்டைப்பாக்கு ஒன்றைக்கடித்து அதிலிருந்து ஒரு துண்டை வாயில் போட்டு மென்றவாறு மெதுவாக பேச தொடங்கினார். என்ன பார்வதி ஆறுமுகம் நல்லா இருக்காபலியா?  இந்த வருஷம் மிந்திரி கோட்டை ஏதாச்சும் ஆச்சா ? என்று  பேச்சை ஆரம்பித்து அவர்களுக்கிடையே தொடர்ந்து பற்றிகொண்டிருந்த  மவுனத்தை உடைத்தார் கருப்பன்.

     அவருதான் மாடா கெடந்து கஷடப்படுராறு, எந்த வேலைய எடுத்துகிட்டாலும் அவருதான் செய்யணும். விடியகாலைல எழுந்தா பொழுதெல்லாம் ஒய்வு ஒழிசல் இல்லாம  கொல்லைக்காட்டில கிடக்கிறார்.ஆடு மாட்டு மேய்க்கணும். மூலைக்கு மூலை இருக்கிற கொல்லைக்கு ஓடணும். ஒரு காரியம் கலுவைக்கு அவரால போக முடியல,நான்தான் நம்ப பொருளைஎல்லாம் கண்ட கண்ட இடத்தில போட்டுட்டு காத்தா பேயா அலையறேன்!” என்றாள்
       
இந்த வருஷம் அவ்வளவா கொட்டை காய்க்கலண்ணா. ரெண்டு காணி  மிந்திரி பரசலா அங்கொண்ணுமா, இங்கொண்ணுமா மரம் இருக்கு சரியா காய்க்கில,ஆனா வரகு  பத்து மூட்டை ஆச்சுண்ணா ! மத்தபடி மணக்கொல்லையில   கம்பு அஞ்சாறு மூட்டை ஆகும்,சோத்துக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லண்ணா, எள்ளு ,கள்ளெண்ணை ஆடி குதிருல வச்சிருக்கோம்,மத்தபடி வேற என்னண்ணா குறை? ஒர கொறைச்சலுமில்ல, !" என சொல்லிமுடித்தாள் பார்வதி.

மீண்டும் வருவாள் காவேரி  !.....