Sunday, 11 August 2019

காவேரி வந்தாள் (15)



Image result for a  dream girl in moon
து அவள் எதிர்பாராதது.  அவன் காவேரியை திருமணம் செய்துகொள்வதற்கு ஒப்புகொள்வான், அல்லது  ஒப்புக்கொள்ளமாட்டான்  என்பதை அவளால் மனதுக்குள் திட்டவட்டமாக  தீர்மானிக்க  இயலாத நிலையில், மீண்டும்  தனது மகனின் முகத்தை  ஒருதரம் உற்றுப்பார்த்தாள். கலியபெருமாள்  முகத்தில் எந்த வித சலனமும்  இல்லாமல் இயல்பாகவே இருந்தான். பெரிய அதிர்ச்சி ஒன்று அவனுக்குள் தோன்றியதற்கான   எந்த அறிகுறியும் இல்லாமல் தனது அம்மாவை பார்த்து  “உனக்கு என்னமா ஆச்சு?”  என்றான்.
“:ஒன்னுமில்லப்பா”
இல்லம்மா !” நீ  எதையோ நினைச்சுகிட்டு சொல்ற, நீங்க எதை சொல்லி நான் கேட்காம போயிட்டேன் ?” நிச்சயம் நீங்க கிழிச்ச கோட்டை எந்த காலத்திலும் தாண்ட மாட்டேன்!” உங்கள் விருப்பம் போலவே செயல்படுவேன்.அதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால் ...
காவேரிக்கு இதில் சம்மதமா என கேட்டு தெரிஞ்சுக்குங்க.அது தன்னுடைய சம்மதத்தை சொன்னதுக்கு அப்புறம் என்கிட்டே அடுத்ததை சொல்லுங்க!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கடந்து சென்றான் கலியன்.
அவ்விடத்தை விட்டு  வீட்டின் வாசலுக்கு வந்த சின்னப்பிள்ளை மேற்காலே திரும்பி பார்த்தாள். பக்கத்து வீட்டு திண்ணையில் காவேரி சின்னப்பிள்ளைகளோடு பல்லாங்குழி விளையாடிக்கொண்டிருந்தாள்..
“காவேரி” என்றாள்  
“என்ன அத்தை?” என்றாள்.
“கொஞ்சம் வாயேன் !”
“வரேன் அத்தே !” என்றவள் அங்கிருந்து எழுந்து அத்தையை  நோக்கி வேகமாக  நடந்து வந்தவள், அத்தையின் அருகில் வந்து  “என்ன அத்த கூப்பிட்ட?”  என்றாள். வாடி ரோட்டு கொல்லைக்கு போய் கொஞ்சம் கீரை பறிச்சிகிட்டு வரலாம் !” என்றாள்.   "வா அத்த போகலாம்” என அத்தையோடு கிளம்பிவிட்டாள். நேராக கொல்லைக்கு போனவர்கள் அத்தையும் காவேரியும் கொல்லையில் கீரைப்பறித்து கொண்டே
“காவேரி ! மாமனை கல்யாணம் பண்ணிக்கிறியா ?” என்றாள் சின்னப்பிள்ளை. 
காவேரி அதிர்ச்சியடைந்தவளாக .வாயடைத்துபோய் நின்றாள். அவளால் அப்போது ஏதும் சொல்ல முடியவில்லை.பேசாமல் மவுனமாக இருந்தாள்.
“ஏண்டி காவேரி நான் ஏதாச்சும்  தப்புதண்டா கேட்டுட்டேனா?” ஓர்வித அச்சத்துடன் கேட்டாள். அதெல்லாம் ஒண்ணுமில்ல அத்தை,
“அப்புறம் ஏன் நான் கேட்டதற்கு பேசாம இருக்க?” ஒன்னும் சொல்லலிய !”
“எனக்கு ஒன்னும் தெரியாது “எதா இருந்தாலும் அப்பாகிட்ட கேளுங்க அத்தை!”என்றாள் காவேரி.
சரி அண்ணன்கிட்ட பேசிக்கிறேன் என்றவள், காவேரியை அழைத்துகொண்டு  அங்கிருந்து வீட்டுக்கு திரும்பினாள் சின்னப்பிள்ளை.
 
ஏதோ ஒரு உணர்வுக்குள்  காவேரி  மூழ்கிக்கொண்டிருந்தாள். அவளை ஒரு வகையான பரபரப்பும் எண்ணங்களுக்கு வசப்படாத ஒருவித சூழலும் பற்றிக்கொண்டிருந்தன. எதிர்பாராத  கேள்விகளும் ,எதிர்பாராத இன்பமும் சிலவேளைகளில்  தன்னிலை மறக்க செய்துவிடுகின்றன. அத்தை தன்னிடம் அவ்வாறு கேட்டது ,கேக்க கூடாத கேள்விகள் அல்ல என்ற போதிலும், அதற்கு  பதிலளிக்கும் பக்குவமும்  சாதுர்யமும் அவளிடம் இல்லாமல் இருந்தது. அவள் இன்னும் குழந்தைத்தனம் மாறாத சின்ன பெண்ணாகவே இருந்தாள். இது நல்லதா கேட்டதா என்று தனக்கு தெரியவில்லை. தனக்கு அப்போது நடை பெற்றது ஒரு திருமணமா என்ற வெம்மையான கேள்வியும் அவளின் மனதின் ஓரத்தில் தொக்கி நிற்கின்றன. அதை இப்போது  நினைத்தாலே அவளுக்கு  நெஞ்சமெல்லாம் நடுங்குகிறது.

என்ன செய்வது திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே திருமணங்களின் வரலாற்றை எல்லாம் முழுமையாக ஆளுக்கு ஒரு திசையிலிருந்து இரக்கமின்றி மேய்ந்து தீர்த்து விடுகிறார்கள். கடித்து குதறி விடுகிறார்கள்.  அந்த பந்தத்திற்குள் இழையோடும்  மெல்லிய நூலிழையாய் பின்னி பிணைந்திருக்கும் உறவுகளைப்பற்றியெல்லாம் அவர்கள் புரிந்து கொள்ளும் மன நிலையில் அவர்கள் இல்லை. தண்ணீர் மொள்ளும் கிணற்றங்கரையில் பேசுகிறார்கள். குளத்தங்கரையில் முட்டு முட்டாக அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள். களை பறிக்குபோது  பேசுகிறார்கள். கண்ட கண்ட இடங்களில்  அமர்ந்து கொண்டு நாக்கில் நரம்பில்லாமல் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். அவர்களின் எண்ணமெல்லாம் தங்களின் உள் மனத்தின் அரிப்புகளையெல்லாம் மற்றவர்களை பேசி பேசியே கொலை செய்கின்றனர். 
 காவேரிக்கு எல்லாம் பழகிவிட்டது.அவளுக்கு முதல் கல்யாணமே என்னவென்று தெரியாது. அவள் கணவரின் சாவோடு எல்லாம் முடிந்து விட்டதாக தோன்றியது. அறுகழுத்துகாரி ,அதான் வந்தவேகத்தில் அறுத்துபாலில் போட்டுவிட்டாள் என்றால் ஒருத்தி.   இவளுக்கு கேட்ட நட்சத்திரமாமே என்றால் ஒருத்தி.  செவ்வாய் நட்சத்திரமாமே,அதான்  அவனை அடித்துவிட்டது என்றால் ஒருத்தி” வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுகிறார்கள்,காவேரிக்கு கேட்டு கேட்டு காது புளித்துவிட்டது. ஏச்சையும் ,பேச்சையும் கேட்டு மனம் பழகிக்கொண்டது

நல்ல காரியம் எங்காவது நடந்தால்  தெருவில்  நடக்கப்படாது என்றார்கள்.,எதிரே வரப்படாது என்றார்கள். பொட்டு வைக்கக்கூடாது.      பூவைக்கக்கூடாது என்றார்கள்.வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்க சொன்னார்கள்.ஊரும் உலகமும் வாழ்க்கையிலிருந்து காவேரி போன்றவர்களை வெகு தூரத்தில் ஒதுக்கி வைத்தது. மயிரிழையில் நழுவிய தாம்பத்ய  வாழ்க்கையின் .உள்வெளியெங்கும்  கண்ணீர் துளியின் வாசம் உயிர் மூச்சின் கடைசி வெளியெங்கும் வீசிக்கொண்டிருந்தது. என்னவென்று அப்போது விளங்கவில்லை.விளங்காமலும் இருக்கவில்லை. இருளுக்கும் ,ஒளிக்குமிடையே தெளிவற்று தெரிந்தது கிழக்கு. புதிதாக பயணிக்க விரும்பிய தருணத்தில் பாதை விலகி சென்றது .உள்ளத்தின் சொல்லவொண்ணா அந்தரங்கம் உடைந்து இரவின் வெளியெங்கும் தன் வண்ணப்பூக்களை நிரப்பிவிட்டன. பார்வையின் வெளியெங்கும்  தேவலோகத்தின் ராசகுமாரனின் புரவியின் குளம்போசையின்  நுண்ணிய மென்னதிர்வுகளில்  விலக்கப்பட்ட கனவுகளின் சன்னல்  வழியே  மெல்ல எட்டிப்பார்க்க துவங்கியது அவளின் உள்ளுணர்விகள்.

அவளின் இன்னொரு பயணத்திற்கு ஒப்புதல் கொடுக்காமல் மனம் தனக்குள் தாழிட்டுக்கொள்கிறது.. அழுது அழுது அவளது கண்களுக்கு மறுத்துவிட்டன. இந்த வயதிலேயே அழுகையின்  அனைத்து பரிமாணங்களும் அவளுக்குத்தெரியும். அவளின் அன்யோன்யத்தை தாழிட்ட அறைக்குள் நான்கு சுவர்களின் ஆன்மாக்களுக்குத்தெரியும், வாழ்க்கை நிராகரித்த பாதைகளில் அவள்மட்டும் ஒற்றைத் தனிமையோடு நின்றவள். உளுத்துப்போன சமூக சட்டங்களுக்கு மத்தியில், காலத்தின் நகர்வில் இசைவற்ற மரபுக்குள் கைதியாக நின்றவள் இந்த காவேரி .

அந்த வார்த்தை எந்த தாக்கத்தையும் அவளுக்குள்  ஏற்படுத்தவில்லை. .அந்த வார்த்தை அவளுக்குள் எந்த சிலிர்ப்பையும் ஏற்படுத்த வில்லை.அந்த வார்த்தை அப்படியே அவளை பனித்துளியாய் கரைந்துபோக சொல்லவில்லை. அந்த வார்த்தை அத்தையின் விருப்பத்துக்கு காவேரியை  முற்றாக இணங்கிபோக சொல்லவில்லை. அவள் அப்படியே அவள்போக்கில் இருந்தாள், அவளுக்குவெளியே என்னென்னெவோ நடக்கிறது, அவளுக்கு வெளியே என்னென்னவோ பேசுகிறார்கள். எதைப்பற்றியும் அவள் கவலைப்படுவதாக இல்லை. அவள் யாருக்காகவும் இனி  உருகி கரைந்து போக விரும்பமில்லை. காலம் அவளை கல்லாக்கியிருந்தது. காலம் அவளை பக்குவ படுத்தியிருந்தது. யாருக்காகவும் அவள் இனி அழவிரும்பவில்லை.இனி யாருக்காவும் அவள் சிரிக்க விரும்பவில்லை.
மற்றவர்களுக்காக வாழும் போலித்தனமான வாழ்க்கையையும்,தனது கற்பனைக்கும் ,கனவுக்கும் வசப்படாத வாழ்க்கையின் பரந்த வெளியை தனக்குள்  நன்கு உருவகப்படுத்தி  வைத்திருந்தாள்.  தனக்கு இனி வாழ்க்கை என்று  எதுவும் தேவையில்லை.சாத்தியப்பட்டால் இப்படியே இருந்துவிட்டு போய்விடுவோமே என்ற எண்ணம்  அவளுக்குள் பயணித்துக்கொண்டிருந்தது. இன்னொரு அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது அவளுக்கும் தெரியும். ஆனால் எதுவும் நடக்கும் ,நடக்காமலும் போகலாம்,ஆனால் காவேரியால் இன்னொரு சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை.

சின்னப்பிள்ளையின்  கோரிக்கையை ஆறுமுகத்தால் முற்றாக நிராகரிக்க முடியவில்லை. தனது கூடப்பிறந்த அண்ணன்  என்ற  முறையில் அவளிடம் இதை கேட்பதற்கு அவளுக்கு முழு உரிமை இருக்கிறது. அவளை விட்டால் ஆறுமுகத்திடம் இதைக் கேட்பதற்கு
யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. தன்னுடைய மகனுக்கு காவிரியை கல்யாணம் கட்டிக்க ஆசைப்பட்டுதான் ஊரிலிருந்து வந்திருக்கிறாள்.
ஒரு வகையில் இது சந்தோஷமான செய்தியாக இருந்தாலும், தான்  மட்டுமே முடிவெடுக்கக்கூடிய  விஷயமில்லை என்பது ஆறுமுகத்துக்கு தெரியும். ஆனால் தங்கச்சியை எப்படி சமாளிப்பது என ஆறுமுகம் மனதில் திட்டமிட்டுக்கொண்டிருந்தான்.
ஏய் பார்வதி ! புள்ளைய சாப்பிட சொல்லு! அப்புறம் பேசுவோம். என்று பிரச்சினையை தொடங்கி வைத்தார்.
இல்லண்ணே நான் ஊருக்கு போகணும்!”
காவேரியை ஒண்டியா ஊட்டுல உட்டுட்டு வந்திருக்கேன்!”
“அதான் மச்சான் இருக்கும்போது என்ன பயம்?”
இருந்தாலும் ஊரு உலகம் என்ன சொல்லும் !” அதாண்ணே!’ தம்பியை அழைச்சுக்கிட்டு வந்தேன்!’
‘சரிம்மா!” என்னதான் நான் சம்மதம் சொன்னாலும்,காவேரிய ஒரு வார்த்த கேட்கனுமில்ல!”
நீ சம்மதம் சொன்னா போதும் அண்ணே !”காவேரி நீ கிழிச்ச கோட்டை தாண்டாது!”
அப்படி இல்லம்மா! காவேரி  ஊருக்கு வரட்டும்.அப்புறம் எல்லாம் பேசி ஒரு முடிவு பண்ணுவோம் ! எல்லாம் நல்ல படியா நடக்கும்! நீ ஒன்னும் கவலைப்படாதே !
எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன் ! நீ தெம்பா  ஊருக்கு போயிட்டு வா தங்கச்சி ! என சின்னப்பிள்ளையை அனுப்பி வைத்தார் ஆறுமுகம்.
என்றாலும் சின்னப்பிள்ளைக்கு  முழு சம்மதமில்லை, அரைகுறை மனதோடு அங்கிருந்து கிளம்பினாள். தாயும் பிள்ளையும் சைக்கிள் பயணத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் ஊர் வரும்வரை  புலம்பியபடியே  இருந்தனர்..
எல்லாவற்றுக்கும்  கலியன் தலையாட்டியபடியே இருந்தான். காவிரியை தனது மகனுக்கு கல்யாணம் கட்டிக்கொள்ள ஆசைப்பட்டவள், தனது மகனிடம்  காவேரியை கட்டிக்கொள்ள உனக்கு விருப்பமாடா தம்பி ?” என ஒரு வார்த்தை கேட்கவில்லை. காவேரி மீதுள்ள பாச்சாதாபத்தின் காரணமாக,அண்ணன் மகளின் வாழ்க்கை வீனாய்போனத்தை எண்ணி சீர்  தூக்கி  நிறுத்தவேண்டும் என்ற எண்ணம் தோன்றியதன் காரணமாக சின்னப்பிள்ளைக்கு  ,தனது மகனின் விருப்பத்தைக்கூட  அறிந்துக்கொள்ள தெரியவில்லை. தனது மகனின்  நிலைப்பாட்டின்மீது எப்போதும் அவளுக்கு அபார நம்பிக்கை, எந்த காலத்திலும் அம்மாவின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாத கிளிபிள்ளையவன்.

கலியன் தனக்கென்ற எந்த தனிப்பட்ட விருப்பங்களையும் சேமித்து வைத்துக் கொள்ளாத வெளிப்படையான மனிதன். பெற்றோர்களின் அன்பைத்தவிர அவனுக்கு வேறொன்றும் தெரியாது. தனது  வீடுண்டு, கொல்லையுண்டு ,கூலி வேலையுண்டு என்ற  நிர்ணயிக்கப்பட்ட  உலகத்தைத்தவிர வேறொன்றையும் அறியாத  கலியன்,  வாழ்வோ ,சாவோ எதுவாகினும்  அம்மா அப்பா  எடுக்கும் முடிவுக்குக்கட்டுப்படும்  ஒரு ஆட்டுக்குட்டியை போலத்தான் இருந்தான்,அவனுக்கென்று சுயமாக முடிவெடுக்கும் அந்த  குணமெல்லாம்  அறியாத பிள்ளை பூச்சியவன்.

ஊரை சைக்கிள் நெருங்கிக்கொண்டிருந்தது.கலியன் ஏதும் பேசாமல் சைக்கிளை மிதித்துகொண்டிருந்தான்.
ஏதும் பேசாம இருக்கியடா  தம்பி ! ஒன்னும் சொல்லலையே! உனக்கு இதுல விருப்பம் இல்லையாப்பா?” என்றாள்.
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா !” நீ சொல்லி நான் என்னத்த மீறியிருக்கிறேன்? வீட்டுக்கு  போயி அப்பாக்கிட்ட பேசி ஒரு முடிவெடுப்போம் !”
அம்மாவும் ,பிள்ளையும் வீடு வந்து சேர்ந்தனர். வீட்டினில் காவேரி சமைத்துக்கொண்டிருந்தாள். சின்னப்பிள்ளையை பார்த்ததும் லேசாக புன்னகைத்தவாறு  ஒரு  சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள்.அதை வாங்கி ஒரு மடக்கு குடித்துவிட்டு  ,மகன் கலியனிடம் சொம்பை கொடுத்துவிட்டு  தோடத்துப்பக்கம் போனாள். மாமன் கலியனை உற்றுப்பார்த்தாள். ஊருக்கு போனீர்களே அம்மா ,அப்பா  நல்லா இருக்காங்களா ?  அப்புறம் என்ன சொன்னாங்க மாமா ?”
உன்னை விசாரிச்சாங்க !”
“என்ன விசாரிச்சாங்க ?” நீ சந்தோஷமா இருக்கியான்னு கேட்டாங்க!’
நீ என்ன சொன்ன ?”
நீ ரொம்ப சந்தோஷமா இருக்கிறதா சொன்னேன்!’
நான் சந்தோஷமா இருக்கிறதா உனக்கு எப்படி தெரியும்?”
அது .. ஒரு அனுமானம்தான்!” நீ சிரிச்சு பேசறத வச்சுதான் சொன்னேன்!”
ஓ ! அப்படியா !' ...என்றாள் காவேரி. 
                                        காவேரி வருவாள்....