Monday, 24 December 2018

அம்மாயி


மஞ்சள் பூசிகொண்டு
எனது வீட்டுகாரருக்கு முன்னால்  நிற்கமுடியாது !
என  கூறிய
உனது
முகத்தின் தோல்கள்  சுருங்கி விட்டன..!
பற்களும் இல்லாமல்
நீ-
பொலிவிழந்து போனாய் !



படுத்த படுக்கையாக 
முடியாமல் கிடக்கிறாய்
பக்கத்திலிருந்து 
கவனித்துக்கொள்ள
உன் மகளை தவிர 
ஒருத்தரும் இல்லை !



கடைசி காலத்தில் 
பீ துணி துவைக்க 
ஒரு பொண்ணு வேணும் 
என-
நீ 
எப்போதோ  கூறியிருந்தாய் !


உன்னை 
பார்க்க பார்க்க
மனது  வலித்தது.
அழகை அழுகையாய் வந்தது !


சுய நினைவை இழந்து
மாதங்கள் ஓடிவிட்டன !
சுவாசம்
மேலும் கீழும்  இழுக்கிறது !
பேச நினைத்ததை
பேசாமலே கிடக்கிறாள் !


ஒவ்வொரு
மருமகளின்  மனதிலும்
ஒவ்வொரு விதமான கேள்விகள் !


ஒரு கண்ணுக்கு  வெண்ணையும்  ...
இன்னொரு கண்ணுக்கு  சுண்ணாம்பும்  வச்சவ ...
மவ வூட்டு புள்ளைய மட்டும்
உருவி உருவி வளர்த்தவ ...
வஞ்சனைகாரி !
என -
மாமியாரை
மனதுக்குள்
போதுமான அளவுக்கு
சபித்துகொண்டார்கள்!


மாமன் வீட்டு
கொள்ளு பேரப்பிள்ளைகள்
"
ஆயி செத்தால்
கருமாதிக்கு  முறுக்கு வரும்
என -
பேசி கொண்டு
ஆங்கங்கே
விளையாடி கொண்டிருந்தார்கள் ! "
இன்றைக்கு
நாளைக்கு
என -
நிறை மரக்கால்
லட்சுமி விளக்கெல்லாம்  வச்சாச்சு !
இன்னும்  முடியலேயே !...
என -
மருமகள்களுக்கு
பெருத்த விசனம் !


கிழவி போயிட்டா
நாளு  பட்ட  செய்வின  வந்து சேரும் ...
என்ற எதிர்பார்ப்பு !


விளக்கெண்ணை யெல்லாம்
வச்சு தேய்ச்சு   குளிப்பாட்டியாச்சு !
இன்னும்
முடியாம கெடந்து அவஸ்தை படரா ...
காலா காலத்திலே  போய் சேர்ந்துட்டா
மத்தவங்களுக்கு  கஷ்டமில்லே "
என -
வயதான
சக கிழவிகளுக்கெலாம்
நிறைய வருத்தமாயிருந்தது!


இன்னொரு
கிழவியின்  ஆலோசனை !
"
பேரனை விட்டு பேச சொல்லுங்க",
என சொல்ல ..



"
அம்மாயி  என்றேன் !"
லேசாக கண் திறந்து
"
உம் " என்ற குரலோடு
பேச்சை நிறுத்தி கொண்டாள்  அம்மாயி  !



எனக்கு பெருத்த ஏமாற்றமாகிபோனது ! 
நாற்பது ஆண்டுகளுக்கு  முன்பு
அப்பாயி சாகும்போது
அப்பாயிடம் 
இதுபோல 
வாக்கு கேட்க சொன்னார்கள்.
அப்பாயியும்  படுத்த படுக்கையாய்   கிடந்தாள்.
அப்பாயிடம் 
அப்பாயி ! அப்பாயி  !
நீ
எனக்கு  என்ன அப்பாயி சொல்லபோற
என நான் கேட்டபோது,  
அப்பாயி தயங்காமல்  சொன்னாள்
என்பேரன் 
பின்னாளில் நல்லாயிருப்பான் !
என வாக்கு சொன்னாள்!
அது சரி அப்பாயி
"உன் மகனுக்கு 
என்ன வாக்கு சொல்ல போற ?" 
என கேட்டபோது,
அவன் மண்ணாய்  போய்டுவான்-
என 
தன மகனுக்கு வாக்கு கொடுத்தாள் !
அவள் சொன்னது போல 
அவள்  மகன் உருப்படாமல் போனார்.
நானும்-
இன்றுவரை 
திசை தெரியாமல்தான்  கிடக்கிறேன்


   
அம்மாயியும் 
சாகும் போது 
எனக்கு  நல்ல  வாக்கு கொடுப்பாள்!
என்ற நம்பிக்கையில்தான் 
பேசு அம்மாயி  என்றேன்
கடைசி வரை பேசாமலே 
போய்விட்டாள் ! 
     

பேச நினைத்த அம்மாயி
என்ன சொல்ல நினைத்தாளோ
அதற்கு பின்பு
அம்மாயி கண் திறக்கவேயில்லை!


அம்மாயி போனபின்பு
எனக்கு 
எல்லாமும் போய்விட்டது!


அந்த ஊரில் 
அவளின் அடிசுவடு  சுவடு 
அறவே இல்லாமல் போனது!

அதன்பின் 
மாமன் வீட்டுக்கு போவதை
அம்மா மறந்தே போனாள் !



அவ்வப்போது
ஒப்பாரி வைத்து,
தனிமையில் அழுது ...
தன்  அம்மாவை
என் -
அம்மா தேடி கொண்டிருக்கிறாள்..!

No comments:

Post a Comment