Monday, 24 December 2018

அறிமுகம் 

     எந்த வலுவான பின்னணியுமில்லாமல்  எதிர்நீச்சல் போடுகின்ற  எண்ணற்ற  உலக ஒடுக்கப்பட்ட மக்களினங்களில்  நானும் ஒருவன். கடுமையான   சமூக வாழ்க்கை  நெருக்கடிகளுக்கு மத்தியில்   எனது  தனித்தன்மை வாய்ந்த  சிந்தனை  தளத்திலிருந்து  வழுவாமல்  தொடர்ந்து  நான் சார்ந்த  சுரண்டப்படும் சமுகத்தின்  பிரதிபலிப்பாக, குரலாக இருந்து வருகிறேன். எனக்கென்று  தனிப்பட்டமுறையில்  பெரிய அளவில்   ஆசை ஒன்றும் இல்லை.  அதனால்  மன உளைச்சல் இல்லை. எனக்கப்பாலே  நான் சிந்தித்து வருகிறேன். எளிமையான வாழ்க்கை சூழலில்  எனது  புதிய இலக்கிய தேடலை  தொடர்ந்து வருகிறேன் . 
       
       என்  உள்மனதில்  ஆழ்ந்துகிடக்கும்  சிலவற்றை  புதிய உத்தியில் வெளிப்படுத்த  முயற்சித்துள்ளேன்.  தொடர்ந்து  எழுதுகிறேன். அதனுடன்  முரண்படுகிறேன்  பின்னர் எழுதிய  அனைத்தையும் கிழித்துப்போடுகிறேன். மீண்டும்  எழுதுகிறேன். தொடர்ந்து முரண்படுகிறேன். நான் முரண்பாடுகளின்  தொகுப்பு.  இது மனித   இயல்பு. முன்னம்  எனக்குள்ளே   தொலைந்து போன   என்  அடையாளத்தை  தேடும் முயற்சிகளில்  இதுவும் ஒன்று. என் அடையாளத்தை தேடி தினம் தினம் தூங்காமல் கிடந்து தவிக்கிறேன். அதை  என்னால்  இனம் காணமுடியும்  என நம்புகிறேன்.
   
    நான்  ஒரு  நாடோடியை போல, எனக்கு தெரிந்தசெய்திகளை எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல்  எனது இயல்பான  போக்கில் நான்   சொல்லி போகிறேன். விமரிசனங்களை  எதிர்பார்த்து காத்து நிற்பதில்லை. எந்த பாராட்டுக்கும்  ஆசைப்பட்டதில்லை. எனதின் இயல்பான  சிந்தனைகளை  சிறைப்படுத்தும்  தடைகளை  உடைப்பதில்  பிரியமுடையவன். ஒழுங்கற்ற  வாழ்க்கை முறையை  வெறுப்பவன். ஆபத்துக்களை   வா வா என்று  கூவி அழைப்பவன். வாழ்க்கையின் முன்னேற்றங்கள், பின்னடைவுகள்  குறித்து  தெளிவான  பார்வை,உலக உழைக்கும் மக்களுக்கிடையிலுள்ள சர்வதேச எல்லைகள் உடைபடுவதில்  அதிகமாக ஆசைபடுபவன். தனிமனித    சாகசங்களில்    நம்பிக்கையில்லாதவன். கூட்டுப்போராட்டத்தால் மட்டுமே  ஒரு தேசத்தின்  தலையெழுத்தை மற்றியமைக்கமுடியும். வரலாற்றின் உந்து சக்தி உழைக்கும்  மக்கள்தான்,  வர்க்கபோராட்டத்தால்  மட்டுமே  வர்க்கப்பகமையை தீர்க்கமுடியும் என்ற  கொள்கைத்தளத்தில்  உறுதியாக நிற்பவன். எனதின்  இலக்கு குறித்த பயணத்தில் இன்னும் சிறிது தூரம் கூட போகவில்லை. நிறைய காத்திருக்கிறேன். வெறும் கவிதைகளால்  பெரிய மாற்றத்தை ஒன்றும் செய்யமுடியாது. அது வாழ்க்கையை  வெளிப்படுத்தும் கருவிகளில்  ஒன்று. ஒரு நல்ல தலைவனின் வருகை பல புரட்சிகர  கவிஞர்களை   உருவாக முடியும். ஒரு புரட்சிக்கர கவிஞனின்  கவிதையால் பெரிய அளவில்  மாற்றம்  ஒன்றையும்  செய்யமுடியாது.  இலக்கியதளங்களில்  புதிய முயற்சிகளுக்கு  தடையாக நிற்கும்  மரபுகளை  வெறுப்பவன்.  இலக்கணம் இலக்கியத்தின்  எதிரிகளாய்  இருப்பதை விரும்பாதவன் . இலக்கியம் எதார்த்த வாழ்வின்   வெளிப்பாடாய் இருக்க வேண்டும்  என்பதிலும்,இலக்கியத்தில் வலிந்து அரசியலை  புகுத்துவதை விரும்பாதவன். இலக்கியம்  அரசியலை   தீர்மானிக்கும் சக்தியல்ல, அது  சமுக வாழ்வின்  உளவியல் சார்ந்த நடத்தை முறைகளை  நெறிப்படுத்தும் கருவியாகும்.
     
      இது  எனதின் முழு வெளிப்பாடல்ல, பல இறகுகளின் தொகுப்பில்  ஒரு சிலவற்றை  இங்கு  வைத்துள்ளேன். அடுத்தடுத்து  இது மேலும் செழுமை பெறும். அதற்காக  எந்த  விமரிசனத்தையும் எதிர்பார்த்து காத்திருக்காதாவன். வெறும் காத்திருத்தலின் மீது   எனது இருத்தலை சுமத்தி  என்னை காயப்படுத்த விரும்பாதவன். சமூக  எதார்த்தத்தின்  மீது    எனதின்  சுமைகளை பகிர்ந்துகொள்ளும் தோள்களுக்கு  ஏங்குவதில்லை. எப்போதும் சுமைகளுடனும், துன்பமான எதிர்பார்ப்புகளுடனும், தவிப்புடனும்  தொடர்ந்து   வாழ்வதில் ஒருவித   மகிழ்ச்சி. எதிலும் நிறைவடையாத  மனது.ஒவ்வொரு  பொழுதையும் அர்த்தமுடையதாக்கும்  கனவுகளின்   சுமைகளோடு  உங்களோடு   நான் ...

No comments:

Post a Comment